தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக நீடித்து வைத்திருந்தவர் கைது!
மட்டக்களப்பு தாழங்குடா பகுதி வீதியில் வைத்து பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக 8 முறை நீடித்து வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்த 45 வயதுடைய வரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
இது பற்றி தெரியவருவதாவது, கடந்த 4ஆம் திகதி தாழங்குடா பகுதியில் போக்குவரத்து பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த கைது செய்யப்பட்டவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
கைது
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை காட்டியுள்ளதையடுத்து பொலிசார் சந்தேகம் கொண்டு அந்த தற்காலிக அனுமதி பத்திரத்தை சோதனையிட்டனர்.

இதன்போது குறித்த சாரதி அனுமதி பத்திரம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சாரதி அனுமதி பத்திரம் பொலிசாரால் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோப்பாய் பொலிஸாரால் தற்காலிகமாக சாரதி அனுமதி பத்திரம் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து சம்மாந்துறையைச் சேர்ந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி தற்போது தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி 8 முறை அதனை சட்டவிரோதமாக நீடித்து கொடுத்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரியின் சம்மாந்துறை வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை மீட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து போலி அனுமதி பத்திரம் வைத்திருந்த காத்தான்குடியை சேர்ந்தவரையும் மீட்கப்பட்ட சான்று பொருளான இறப்பர் முத்திரையுடன் கடந்த 4ஆம் திகதி கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.