பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் முக்கியமான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இதன் காரணமாக இன்று சர்வதேசத்தின் பார்வை ஜெனீவாவின் மீது இருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். வாக்கெடுப்பு நேற்று எடுக்கப்படவிருந்த போதும் சில திட்டமிடல் சிக்கல்களைத் தொடர்ந்து இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய வாக்கெடுப்புடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வு நிறைவுப் பெறவுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பின்போது இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வாக்கெடுப்பின்போது அதில் பங்கேற்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஜெர்மனி ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கையின் முக்கியக் குழு, அது நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவைத் திரட்டியுள்ளதால், தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம், இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடனும், இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை செயல்படுத்தவும் ஆலோசனை மற்றும் தொழிநுட்ப உதவிகளையும் வழங்குவதற்கான நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
