திடீரென கைகோர்த்த பிரதான கட்சிகள்! முன்னாள் ஜனாதிபதி ரணில் வழங்கிய செய்தி
நாட்டின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிவிதுரு ஹெல உருமய, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு பிரதான கட்சிகள் இந்த பொது வேலைத்திட்டத்தில் கைகோர்த்துள்ளன.
இது குறித்துத் தெளிவுபடுத்துவதற்கான விசேட ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் சஞ்சீவ எதிரிமான்னவும் கலந்துகொண்டனர்.
வாழ்த்தும் ரணில்..
அத்துடன் பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில, ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பங்கேற்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் அகிலவிராஜ் காரியவசம், நவீன் திஸாநாயக்க ஆகியோரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் மனோ கணேசன், வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டு எதிர்க்கட்சிகளின் இந்தப் பொது வேலைத்திட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், "ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தருணத்தில், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைவது பாராட்டத்தக்கது.
இறையாண்மை பாதுகாப்பு
ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தச் செயற்பாட்டின் பங்காளியாகத் தொடரும். சவால்களை வெல்ல ஒன்றிணைவதைத் தவிர வேறு வழியில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உரையாற்றுகையில், "ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இது குறித்துக் கலந்துரையாடினேன். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுகள் ஒரு இணக்கப்பாட்டை எட்டிய பின்னர், அவரும் எம்முடன் இந்தப் பொது மேடையில் இணைந்துகொள்வார்" எனத் தெரிவித்தார்.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் உரையாற்றுகையில், "இந்தக் கூட்டு வேலைத்திட்டத்துக்கான கொள்கை ரீதியான கட்டமைப்புத் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
வெகுவிரைவில் அந்த ஆவணத்தைச் சகல கட்சித் தலைவர்களினதும் கையொப்பத்துடன் நாட்டுக்கு வெளிப்படுத்துவோம். அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, சிவில் அமைப்புகளும் எம்முடன் கைகோர்த்துள்ளன" என்றார்