ரஷ்யாவிடம் இருந்து மைத்திரிக்கு வந்த பதில் கடிதம்
ரஷ்ய அரசாங்கம் தனக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருந்த விடயங்கள் செய்யக் கூடியவை எனவும் அரசாங்கம் அவற்றை செய்வற்கான முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்றால் வருத்தப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்த்திற்கு மூன்று நாளில் பதில்
ரஷ்ய விமானம் சம்பந்தமாக ஏற்பட்ட நெருக்கடிக்கு பின்னர், நான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அனுப்பிய கடிதத்திற்கு மூன்று நாட்களுக்குள் பதில் கடிதம் கிடைத்தது.
எனக்கு கிடைத்த பதில் கடிதத்தை நான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தேன். பதில் கடிதத்தில் கூறப்பட்டிருந்தவற்றை செய்தால், மீண்டும் விமானப் பயணங்கள் மாத்திரமல்லாது வர்த்தக நடவடிக்கைகளையும் ஆரம்பிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.
ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினையை ராஜதந்திர ரீதியில் அணுகி இருக்கலாம்- ரஷ்யா
விமான சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் இலங்கை செயற்பட்ட விதம் தவறானது எனவும் நீதிமன்றத்திற்கு செல்லாது ராஜதந்திர ரீதியில் பிரச்சினையை தீர்த்துக்கொண்டிருக்கலாம் எனவும் ரஷ்யாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்காது என்பதற்கு தெளிவாக உறுதிமொழியை வழங்குமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உரத்தையோ எரிபொருளையோ பெற்றுக்கொள்ள ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை எனவும் சம்பந்தப்பட்ட ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் இலங்கை நிறுவனங்களின் இணக்கப்பாட்டுடன் அந்த கொடுக்கல், வாங்கலை செய்ய முடியும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமல்ல நல்லெண்ணத்தை அதிகரிப்பதற்காகவும் தான் ரஷயாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
ரஷ்ய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய கடிதத்தை ரஷ்ய மொழியில் மொழிப்பெயர்த்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.