விடுதலைப் புலிகள் தலைவரை காப்பாற்ற முயற்சித்த மகிந்த ராஜபக்ச! சரத் பொன்சேகாவின் பரபரப்பு தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை காப்பாற்றுவதற்கு தீட்டிய திட்டத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தியுள்ளார்.
ஈழப்போரின் இறுதித் தருணத்தில் விடுதலைப் புலிகள் சரணடையும் விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் காணொளி ஒன்றை பொன்சேகா இன்று (18.02.2026) வெளியிட்டார்.
சரத் பொன்சேகா நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த காணொளியை பகிரங்கப்படுத்தினார்.
சரணடைய தீட்டப்பட்ட சதித்திட்டம்
அச்சந்தர்ப்பத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை ராஜபக்சக்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைய ஒத்துக் கொள்ளவில்லை.
அவர்கள் மூன்றாம் தரப்பிடம் சரணடையவே விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனால் நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று இன்று தெரிவிக்கின்றனர்.

ஆனால் இராணுவத்திடம் விடுதலைப் புலிகள் அமைப்பினர் சரணடைந்திருந்தால் ராஜபக்சக்கள் இவர்களை காப்பாற்றி இன்று தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரை வடக்கின் முதலமைச்சராக்கியிருப்பர். அவர்கள் சரணடைய மறுத்ததால் இன்று தேசிய வீரர்கள் போல் பேலி வேசம் காட்டுகின்றனர்.
மஹிந்தவின் செயற்பாடு
ஈழப்போரின் இறுதித் தருணத்தில் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ஆகியோர் போரை எப்படி நிறுத்துவது என்றே திட்டம் தீட்டினர்.அப்போது நான் சீனாவில் இருந்தேன்.
ஆனால் போரில் நடப்பது அனைத்தையும் அறிந்து கொண்டே இருந்தேன். 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ச, எரிக்சொல்ஹெயிம், ஐ.சி.ஆர்.சி, அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் ஆகியோருடன் பேசி விடுதலைப் புலிகள் சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கினர்.

ஆனால் என்னிடம் அவ்வாறான ஒரு திட்டம் இருக்கவில்லை. விடுதலைப் புலிகளை காப்பாற்றும் நோக்கம் இருக்கவில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்திலே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த காணொளியை எடுத்த ஊடகவியலாளரை கொல்வதற்கு கோட்டாபய தேடித்திரிந்தார். அவர் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri