நாட்டு மக்களின் மனங்களில் மகிந்த நிலைத்திருப்பாராம் - மொட்டுக் கட்சி கூறுகின்றது
விடுதலைப் புலிகளுக்கு முடிவு கட்டி நாட்டைப் பாதுகாத்த மகிந்த ராஜபக்ச, மக்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பில் இருந்து வெளியேறி தங்காலை - கால்டன் இல்லத்துக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்குள்ள மக்களுடன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
மகிந்தவின் அரசியல் பயணம்
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அவரைச் சந்திக்க வருகின்றனர். இந்த அரசு விரும்பியவாறு மகிந்த ராஜபக்ச தற்போது அரச மாளிகையில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் அரச மாளிகையில் தங்கி இருப்பதுதான் பெரும் பிரச்சினையாக அரசு காண்பித்தது.
எனவே, தற்போது மக்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தை இந்த அரசால் தடுத்து நிறுத்த முடியாது.
மக்களிடமிருந்து மகிந்த ராஜபக்சவைப் பிரிக்க முடியாது. விடுதலைப் புலிகளுக்கு முடிவு கட்டி நாட்டைப் பாதுகாத்த மகிந்த ராஜபக்ச, மக்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார் என தெரிவித்துள்ளார்.




