சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எரிபொருள் விலையேற்ற விவகாரம்! - விசாரணைக்கு தயாராகும் மகிந்த?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசமிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை காரணம் காட்டி அரசாங்கத்திற்குள் பிரச்சினை காணப்படுவதாக சிலர் நினைத்தால் அது தவறு என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் மாற்றம் இருக்கும் என்ற எதிர்க்கட்சியின் கருத்து தவறானது என்றும் அரசாங்கம் தொடரும் என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ம் திகதி எரிபொருள் விலையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்திருந்தார்.
இது தனது தனிப்பட்ட முடிவு அல்லவெனவும், எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு கூட்டு முடிவு என்று கூறினார்.
எனினும், எரிபொருள் விலை அதிகரிப்பை விமர்சித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் துறைக்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், குறித்த அறிக்கை கட்சி தலைவர்களின் அனுமதியின்றி வெளியிட்டப்பட்ட தன்னிச்சையான அறிக்கை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே, சாகர காரியவசமிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.