மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார்:இந்திக்க அனுருத்த
அவசியமான அளவுக்கு எரிபொருள் இன்றி அவற்றை வழங்குவதற்கு அத்தியவசிய சேவைகள் என பிரிப்பது பலனளிக்காத செயற்பாடு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டுக்கு தேவையான அளவுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தண்ணீரை அள்ள முதலில் குடம் நிறைய வேண்டும்
பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவி வகித்த போது பேச்சுவார்த்தை மூலமாக துரிதமாக எரிபொருளை கொண்டு வர பல பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அத்தியவசிய சேவையோ வேறு எந்த சேவை என பெயரிட்டாலும் தண்ணீரை எடுக்க முதலில் குடம் நிறைய வேண்டும். தேவையான அளவுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யாது, வரையறை விதித்தாலும் அது சரியாக நடக்காது.
இந்தியாவின் கடன் வசதிகளின் கீழ் கடந்த காலத்தில் அடுத்தடுத்த கப்பல்களில் எரிபொருளை கொண்டு வந்தோம். அடுத்து வரும் கப்பல் யாருடையது போன்ற விடயங்களை நாங்கள் கூறவில்லை.
அரசாங்கத்தில் நாங்கள் இல்லை என்று நாங்கள் வெறுமனே இருப்பதில்லை. பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி யோசனைகளை முன்வைத்து வருகின்றோம்.
அதேபோல் பெற்றுக்கொண்ட கடனை திரும்ப செலுத்துவார்களா என்று சர்வதேசம் எதிர்பார்க்கும். செலுத்தாமல் இருப்பது தீர்வாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
நாங்கள் வங்கியில் கடனை பெற்று அதனை திரும்ப செலுத்தாவிட்டால், கடனை பெற்றுக்கொண்ட வங்கி, நாம் கடனாளி என்பதை முழு வங்கி கட்டமைப்புக்கும் அறிவிக்கும்.
மகிந்த ராஜபக்ச ஓய்வுபெற மாட்டார்
மகிந்த ராஜபக்ச எமது முன்னுதாரண தலைவர். அவரை காண்பித்தே தற்போது நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
அவருக்கு எந்த நிலைமையும் ஒத்து போகும். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அனைத்து மகிந்த ராஜபக்சவும் ஒன்றுதான் என ஒரு முறை அவர் கூறியிருந்தார்.
அவருக்கு 50 வருடத்திற்கும் மேற்பட்ட அரசியல் அனுபவம் இருக்கின்றது. சில பதிவுகளை பதிவேற்றி, மகிந்த ராஜபக்சவை மனரீதியாக வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர்.
அவர் அப்படி சளைத்து போகும் நபர் அல்ல. எந்த அரசியல் கட்சி அந்த பதிவை வெளியிட்டது என்பது கண்டறியப்பட்டு விட்டது. மகிந்த ராஜபக்ச அரசியலை நிறுத்த மாட்டார்.
அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார். நாங்கள் நாளைய தினம் அவரை சந்திக்க சென்றாலும் அரசியல் பற்றி எங்களுடன் பேசுவாரே தவிர எம்மிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளை பற்றி பேச மாட்டார் என இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.