விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு! பெருமதிப்பை சிதைக்கும் செயல் - கேள்விகளை அடுக்கும் பெ.மணியரசன்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச்சென்று வாழ்கின்றார் என்பது அவர் மீது தமிழர்களும்,பன்னாட்டு மக்களும் வைத்துள்ள பெருமதிப்பை சிதைப்பதாக உள்ளது என தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.
பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் உயிருடன் இல்லை
மேலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18ல் நடந்த இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று இலங்கை இராணுவம் மறுப்பு வெளியிட்டிருந்தது.
இதற்கமைய, பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளதுடன், இது குறித்து அரசியல் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அறிக்கையொன்றினை வெளியிட்டு பல கேள்விகளை தொடுத்துள்ளார்.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பழ.நெடுமாறனுக்கு வழங்கப்பட்ட அதிகாரம்
தலைமறைவிலிருந்து வெளிவந்து தமிழீழ விடுதலை இயக்கத்தைத் தொடங்க இருக்கும் பிரபாகரனுக்கு அவரது இலட்சியத்திட்டத்தை வெளியிட சொந்த அமைப்பு இல்லாமலா இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பு செயற்பட்ட காலத்திலும், அது செயல்படாத காலத்திலும் அந்த அமைப்பின் சார்பில் கருத்துகள், நிலைப்பாடுகள், முடிவுகளை வெளியிடும் அதிகாரத்தை பழ.நெடுமாறன் உள்ளிட்டோருக்கு அவ்வமைப்பு வழங்கியதில்லை என்றும் கூறியுள்ளார்.
நம்பகத்தன்மை
மேலும், 2009 மே 18 இலிருந்து பிரபாகரன் தப்பிச்சென்று உயிரோடிருக்கிறார் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார். ஆனால் “இன்றுவரை பிரபாகரன் வரவில்லை. இப்போது நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இந்தியாவுக்கு எந்த அளவு அதிக விசுவாசத்துடன் பிரபாகரன் இருந்தார் என்று காட்டும் அக்கறையே மேலோங்கியுள்ளது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை நம்பகத்தன்மை உடையதாக இல்லை எனவும், “இது ஆபத்தானது. பிரபாகரன் அவர்கள் தப்பிச்சென்று வாழ்கின்றார் என்பது அவர் மீது தமிழர்களும் பன்னாட்டு மக்களும் வைத்துள்ள பெருமதிப்பைச் சிதைப்பதாக உள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உற்சாகத்தோடு தமிழ் நாட்டுத் தமிழர்கள் செயற்படும்போது, பயங்கரவாத அமைப்பை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆட்சியாளர்கள் அவர்களைச் சிறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது” என்றும் அச்சம் எழுப்பியுள்ளார்.