வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - யாழில் கூடிய சர்வதேச பிரதிநிதிகள்
புதிய இணைப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் "நீதிக்கான நீள் பயணம்" எனும் சர்வதேச மாநாடு இடம்பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாடு இடம்பெற்ற மண்டபத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாவனை பொருட்கள், அவர்கள் விரும்பி சேகரித்த பொருட்கள், அவர்களின் நினைவாக இன்றும் உறவுகளிடம் உள்ள பொருட்கள் என்பவற்றை காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றையும் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள்பயணம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு தற்போது யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மாநாடு நடைபெற்று வருகின்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்று வருகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் பேரணியின் முன்னிலையில் சென்றதுடன், உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணி
பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள், உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணியில் கலந்துகொண்டனர்.

உலகளவில் அதிகளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீதி கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
யாழ்ப்பாண நகரின் ஊடாக முன்னேறிய பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்தது. அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற குடும்பங்கள் கோரிக்கை விடுத்தனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் குறித்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
ஹரக் கட்டாவின் பரபரப்பு வாக்குமூலம்! சிக்கிய முன்னாள் அமைச்சரின் 5 கோடி ரூபாய் மோசடி - வெளிச்சத்திற்கு வரவுள்ள சம்பவங்கள்
























