உள்ளூராட்சி மன்ற ஆசனங்கள் குறைக்கப்படவேண்டும் என்று தெரிவுக்குழுவில் பரிந்துரை
முன்பிருந்த தேர்தல் முறையின்படி மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பரிந்துரைத்துள்ளது.
தேர்தல் முறையை சீர்திருத்துவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றபோது, இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாகாணசபை சபை தேர்தல்களை நடத்தவேண்டுமானால், புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும் என்று சட்ட மா அதிபர் பரிந்துரை செய்துள்ளார்.
மாகாணசபை தேர்தல்களை நடத்தாமல் இருப்பதன் காரணமாக பல்வேறு நிர்வாக பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
எனவே அதற்கான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த ஆண்டு முதல் கால் பகுதியில் நடத்தப்படவேண்டும்.
அத்துடன் அவற்றின் பிரதிநிதிகள் 5ஆயிரத்து 500ஆக குறைக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் புதிய தேர்தல் முறை ஒன்றின்போது 60வீதமான உறுப்பினர்கள் தொகுதி முறையிலும், 40வீத உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவுசெய்யப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது
அத்துடன் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக இருக்கவேண்டும் என்றும் அந்த கட்சி பரிந்துரை செய்துள்ளது.
இந்தநிலையில் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வை எதிர்வரும் 7ஆம் திகதியன்று நடத்துவதற்கு நேற்றைய அமர்வில் இணக்கம் காணப்பட்டது.