எரிவாயு தட்டுப்பாடு குறித்து லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3,900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பகிர்ந்தளிக்க நடவடிக்கை
நேற்று கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை விரைவில் கொள்கலன்களுக்கு நிரப்பி அதனைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிலையில் நாட்டில் போதுமான களஞ்சியசாலைகள் இன்மையால், கொள்வனவு செய்யப்பட்ட 33000 மெட்ரிக்தொன் எரிவாயுவை மாலைத்தீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து மூன்று தினங்களுக்கு ஒருமுறை சிறிய கப்பல்களில் நாட்டுக்கு எரிவாயுவை கொண்டுவர லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எரிவாயுவை கொள்வனவு செய்யத் திட்டம்
அதற்கு மேலதிகமாக, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒன்பதாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனூடாக நாட்டில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.