விவசாயப்பெரு மக்களின் வாழ்வு செழிக்கட்டும்: தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தியில் அங்கஜன் இராமநாதன்
கடினமாக உழைத்து கௌரவமாக வாழும் விவசாயப் பெருங் குடி மக்களின் வாழ்வில் வளம் வந்து சேர வேண்டும் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,
தைப்பொங்கல் உழவர் திருநாளாகும்.விவசாயமே தமிழர்களின் ஜீவனோபாயத் தொழில். விவசாயிகள் தமது அறுவடை சிறக்க உதவிய பூமித் தாய்க்கும்-சூரிய பகவானுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கல் பண்டிகையைத் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் புதிய ஆண்டின் தொடக்க நாளாக இத் தைத்திருநாள் அமைய வேண்டும்.தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை நிஜமாக வேண்டும். எமது விவசாயிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டு பெறுபேற்றுக்காகக் காத்திருக்கின்றனர்.
மண்ணுக்கும் மனிதனுக்கும் கேடு விளைவிக்கும் இரசாயனத்தைத் தவிர்த்து நோய் நொடியற்ற சுகமான வாழ்விற்கு வழியமைக்கும் சேதன முறையிலான பயிற்ச்செய்கையே அந்த முதல் முயற்சி.எமது விவசாயிகளின் முதல் முயற்சி அமோக வெற்றியைக் கொடுத்து அதனையே மீண்டும் தொடர இந்நன்னாளில் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு,நாகரீகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும்
தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து உலக வாழ் தமிழ் மக்களுக்கும் எனது
உளமார்ந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.