கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகம் தாக்கப்பட்டது என வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை: சந்திரகுமார்
“கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகம் மற்றும் வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதோடு, அவதூறுகளையும் சிலர் மேற்கொண்டு வருவதாகவும், எனவே இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக” முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக அரசியல், மற்றும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். எனது செயற்பாடுகள் எப்படியானது என்பதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆனாலும் சில விசமிகள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்கள் மத்தியில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதோடு, என் தொடர்பில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர்.
எனவே இது தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை, இவ்வாறானவர்கள் தொடர்பில் விரைந்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன். தற்போது அரசியல் அதிகாரத்திற்கு இல்லை என்றாலும் கிளிநொச்சியில் எமக்கான மக்கள் ஆதரவு கடந்த காலத்தை விட அதிகரித்து வருகிறது.
தனியொரு தரப்பாக நின்று மக்களுக்கான எமது பணியினை மேற்கொண்டு வருகின்றோம். அவசரக்கால சட்டம் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கின்ற நடவடிக்கைகளையும், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எதிர்த்தும், கண்டித்தும் வந்திருக்கின்றோம்.
இதனை அண்மைய எமது ஊடக அறிக்கைகளில்
காணலாம். ஆனால் இதனையெல்லாம் அறிந்தும் தங்களுடைய குறுகிய அரசியல்
நோக்கங்களுக்காகச் சிலர் மக்களைக் குழப்பி வருகின்றனர்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.