இந்திய கடற்றொழிலாளர்களின் மோசமான செயலை கண்டித்த அந்தனிசில் ராஜ்குமார்
பருத்தித்துறையை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரை கடத்திச் சென்று, தாக்குதல் மேற்கொண்ட இந்திய கடற்றொழிலாளர்களின் செயல் சர்வதேச மனித உரிமை மீறலாகும். இதுபோன்று தமிழ் மக்கள் துன்புறத்தப்படும் போது கண்டனக் குரல் எழுப்பாமல் மௌனமாக இருப்பது ஏன் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(29.04.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தாக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள்
“தொப்புல் கொடி உறவு” எனக் கூறி கொண்டு இரு நாடுகளாக இருந்தாலும் பேசுகின்ற மொழி ஒன்றாக இருந்தும் அந்த கடற்றொழிலாளரின் கையையும் காலையும் கட்டி, தமிழ் நாட்டுக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்துள்ளார்கள். இது போன்று செய்த நாகப்பட்டிணம் கடற்றொழிலாளர்களின் செயல் சர்வதேச மனித உரிமை மீறலாகும். அதேவேளை, தமிழ் நாட்டில் இருக்கின்ற அத்தனை அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

“தொப்புக் கொடி உறவு என சொல்லிக் கொண்டு அரசியல் செய்கின்ற நீங்கள், இலங்கை கடற்றொழிலாளர்களை இவ்வாறு கடத்திச் சென்று துன்புறுத்தி தாக்கப்பட்டபோது நீங்கள் மௌனமாக இருப்பதை கண்டு நாங்கள் மிகவும் மனவேதனை அடைகின்றோம்.”
எனவே, பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரின் நலநனை கருத்தில் கொண்டு அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதோடு அவருக்கான இழப்பீடை வழங்க அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பதுடன், சட்டத்தை கையில் எடுத்து கடற்றொழிலாளரை தாக்கிய நாகபட்டிணம் கடற்றொழிலாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட வேண்டும் என தமிழ் நாட்டில் உள்ள அத்தனை அரசியல் தலைவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழக கடற்றொழிலாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
இந்த இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கிடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு எங்கள் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராக இருந்தபோது பழைய தொடருந்து வண்டிகளின் பெட்டிகள், பழைய பேருந்து வண்டிகளை அந்த கடலுக்குள் கொண்டு சென்று இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு செய்து கொண்டிருந்த போது அதனை முழுமையாக செய்வதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைத்து இருந்தால் இந்த பிரச்சனை இன்று ஏற்பட்டிருக்காது.

எனவே, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கு அமைச்சர் சந்திரசேகரன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த கருத்திட்டத்தை செயற்படுத்தினால் இந்திய கடற்றொழிலாளர்கள் ஒருபோதும் எங்கள் எல்லைக்குள் வரமாட்டார்கள்.
அத்துடன் அந்த இழுவை மடிபடகு தொழிலை அவர்களால் ஒரு போதும் செய்ய முடியாது. இதனால் இரு நாட்டு கடற்றொழிலாளருக்குள்ளும் ஒருபோதும் முரண்பாடு ஏற்படாது.
எனவே, இந்த பழைய தொடருந்து பெட்டிகள், பேருந்து வண்டிகளை கடலுக்குள் கொண்டு சென்று இறக்கினால் இந்த இருநாட்டு கடற்றொழிலாளர்களின் முரண்பாடு முடிவுக்கு வரும்” என்றார்.