நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த சட்டத்தரணிகள்
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் (7)ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பணிப் புறக்கணிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் சட்டத்தரணிகளும் இன்றையதினம் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
மாவட்ட நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதிமன்றத்திற்கு இன்றையதினம் சட்டத்தரணிகள் சமூகமளிக்காது பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சம்பவம் எதிர் காலத்தில் இடம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ளனர்.
இதனால் இன்றைய தினம் மன்னாரில் நீதிமன்ற செயல்பாடுகள் ஸ்தம்பித மடைந்துள்ளதோடு,இன்றைய நாளுக்கான வழக்கு விசாரணைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.
திருகோணமலை
திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று(7) ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலும் அலுவலகத்திலும்,சட்டத்துக்கு புறம்பான வகையில் பொலிஸாரினால், மேற்கொண்ட சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு இடம் பெற்றது.
பொலிஸாரின் அடாவடி
காலை 9 மணி தொடக்கம் 10 மணி வரை திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால், சட்டத்தரணிகள் ஒன்று கூடி, தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர்.
பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்துக்கு புறம்பான சோதனை நடவடிக்கைக்கு எதிராகவே, அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும், எவர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அதற்கு நீதிமன்றத்தின் ஊடாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், ஆனால், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விடயம் பொலிஸாரின் அடாவடித்தனத்தை எடுத்துக்காட்டுவதாக, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.








