நாட்டில் இருப்பது பலமிக்கவர்களின் சட்டம்: பேராயர் ஆதங்கம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான குற்றவாளிகள் எனக் கூறப்படும் நபர்கள் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருவதுடன் பொலிஸில் பதவிகளை வகித்துக்கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர் என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டமோ சட்டத்திற்கு இடமோ இல்லை
கொழும்பு முகத்துவாரம் புனித சந்தியாகோ தேவாலயத்தின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று நடைபெற்ற வழிபாடுகளில் கலந்துக்கொண்டு பேசும் போதே பேராயர் இதனை கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் சட்டமோ, சட்டத்திற்கு இடமோ இல்லை.நாட்டில் நடைமுறையில் இருப்பது அநீதி. இது சம்பந்தமாக நாடு என்ற வகையில் உலகத்திற்கு முன்னால் வெட்கப்பட வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்தும் சட்டம் அதனை செய்யவில்லை
நாட்டில் இருப்பது பலமிக்கவர்களின் சட்டம். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக சுதந்திரமான விசாரணையை நடத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து,அவர்களுக்கு எதிராக வழக்கு தொடருமாறு பல முறை கோரிக்கை விடுத்தும் நாட்டின் சட்டம் அதனை செய்யவில்லை.
பொரல்லை சகல புனிதர்கள் தேவாலயத்தில் கடந்த ஜனவரி 11 ஆம் திகதி வைக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாக தேவாலயத்தின் சன்கிறிஸ்டியன் உட்பட சிலர் ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
எனினும் கைக்குண்டை கொண்டு வந்து தேவாலயத்தில் வைத்தது இவர்கள அல்ல, பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள். எனினும் அது குறித்து எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
அதிகராம் மற்றும் பணத்திற்காக கொள்கைகளை காட்டிக்கொடுக்கும் மனிதர்கள்
அதிகாரத்திற்கும், பணத்திற்கும் கொள்கைகளை காட்டிக்கொடுக்கும் மனிதர்கள் காரணமாக நாடு அதளபாதாளத்திற்குள் சென்று அழிவுக்கு இரையாகியுள்ளது.
எமது முட்டாள்த்தனம் காரணமாகவே மக்கள் கஷ்டப்படுகின்றனர் என்று சில நேரம் நினைக்க தோன்றுகிறது. நாட்டை தர்மதீவு எனக் கூறினாலும் தர்ம தீவில் நடக்கும் விடயங்கள் தெரிகிறது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 269 பேரின் உயிர் பறிக்கப்பட்டமை சம்பந்தமாக இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. இது அதிகாரம் படைத்தவர்களின் அதிகாரம் எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.