சட்டக்கல்லூரி தமிழ் மாணவர்களின் வெற்றி விழா
இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றம், தனது 75ம் ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடவுள்ளது.
இதன்படி எதிர்வரும், 23ம் திகதி ஓகஸ்ட் மாதம் 2025ம் ஆண்டு அன்று ' மன்றம் 75' எனும் பெயரில் அரங்கேற்ற உள்ளது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெய்பீம் படத்தின் நிஜ நாயகன் நீதிபதி சந்துரு அவர்கள் பங்குபற்ற உள்ளார்.
சட்ட மாணவர் தமிழ் மன்றம்
மேற்படி இவ் விழா ஆனது வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு இடம்பெற உள்ளது.
இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றமானது தலைநகரில் உள்ள தொன்மையானதும் ஆளுமையானதுமான தமிழ் மன்றங்களில் ஒன்று என்ற பெருமை கொண்டது.
1950 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற இவ் மன்றமானது எழுபத்தைந்து ஆண்டுகளிற்கு முன்னர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
தொன்மைக்கும் பெருமைக்கும் உரியதான இந்த மன்றத்தில் சட்டக் கல்லூரி உள்ளக மாணவர்களும் ஏனைய சட்டக் கற்கை நிறுவனங்களில் கற்று, மாணவர்களாக சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும் அங்கம் வகிக்கின்றார்கள்.
பற்பல சிறப்புகளுக்கும் பெருமைகளுக்குமுரிய சட்ட மாணவர் தமிழ் மன்றமானது இன்று தனது அகவை 75 இல் காலடி எடுத்து வைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றமானது 'மன்றம் 75' எனும் பெயரில் பவள விழாவாக மிக விமர்சையாக கொண்டாடத் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் குறித்த இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவை மேலும் சிறப்பிப்பதற்காக பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி S. துரைராஜா அவர்கள் பங்குபற்ற உள்ளார் என்பதுடன் கௌரவ விருந்தினராக இலங்கை சட்டக்கல்லூரி அதிபர் பிரஷந்த லால் டி அல்விஸ் அவர்களும் பங்குபற்ற உள்ளார்.
மேன்மை பொருந்திய விழா
மேலும் இவ் மேன்மை பொருந்திய விழாவை அழகு படுத்த அடிப்படை உரிமையின் நிதர்சனத்தை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக்காட்டிய "ஜெய்பீம்" படத்தின் நிஜ கதை நாயகன் மட்ராஸ் மேல் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி K. சந்துரு அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ள உள்ளார்.
இவற்றைத் தொடர்ந்து இவ் மாபெரும் நிகழ்வில் நீதிபதிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
தொடர்ச்சியாக இவ் விழாவிற்கு வலுசேர்க்க கலைமாமணி ஸ்ரீறிமதி . சிவானந்தி ஹரிதர்ஷன் அவர்களினதும், “பரத கலாவித்தகர் “ ஶ்ரீமதி. ஷாலினி வாகீஸ்வரன் அவர்களினதும் மற்றும் திருமதி. கீதாஞ்சலி சுதர்ஷன் அவர்களினதும் நெறியாள்கையில் அற்புதமான நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படவுள்ளதுடன் "இசைக்கலைமணி" ஸ்ரீமதி.
விஷ்ணுப்ரியா ரட்ணகுமார் அவர்களின் நெறியாள்கையில் இசை நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.







