முல்லைத்தீவில் சமூக "ஹரித அபிமானி" தேசிய மரநடுகை திட்டம் ஆரம்பித்து வைப்பு
முல்லைத்தீவு - அளம்பில் புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தில் சமூக "ஹரித அபிமானி" தேசிய மரநடுகை திட்டம் நேற்று மேலதிக அரசாங்க அதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக நீர் மூலங்களைப் பாதுகாப்பதற்காக நாடளாவிய ரீதியிலான பத்து இலட்சம் மரக் கன்றுகள் நடும் சமூக "ஹரித அபிமானி" தேசிய மரநடுகை வேலைத் திட்டம் 2020 முல்லைத்தீவில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக நீர் வழங்கல் அமைச்சு, கிராமிய மற்றும் பிராந்திய குடிநீர் வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மற்றும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் செயற்றிட்டத்திற்கு அமைவாக பத்து இலட்சம் மரக்கன்றுகள் நடும் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி செ.பார்த்தீபகாந்தனின் தலைமையில் அளம்பில் புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முதல் மரக்கன்றினை நாட்டி ஆரம்பித்து வைத்துள்ளார்.
தொடர்ந்து அதிதிகளால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கயூரதன், தேவாலய பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய .தயாகரன், அளம்பில் வித்தியாலய அதிபர் செ.அல்பிரட் வட்டார பிரதேச சபை உறுப்பினர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள், கிராம சேவகர், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




