நாட்டில் நடந்த பாரிய அஸ்வெசும நிதி மோசடி: பெண் அரச ஊழியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கையில் அதிகளவான அஸ்வெசும பயனாளிகள் காணப்படும் பிரதேச செயலகங்களில் ஒன்றான நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு அரச ஊழியர்களும், செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு அரச ஊழியர்களும் இன்று 25ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அஸ்வெசும திட்டத்தில் நடந்த பாரிய நிதி மோசடி
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, சுமார் ஒரு கோடியே 62 இலட்சம் ரூபாய் வரையான அஸ்வெசும நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரண்டு பெண் அரச ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயனாளிகளின் கோரிக்கை
இதேவேளை, தமக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, பல பயனாளிகள் நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு தொடர்ச்சியாக சென்று தங்களது நிதி தொடர்பான தகவல்களை கோரி வருகின்றனர்.
அஸ்வெசும போன்ற அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்களின் நிதி உரிய பயனாளிகளுக்கு முறையாக சென்றடைவதை உறுதி செய்வதுடன், நிதி மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்களை அழிக்க அரங்கேற்றிய துப்பாக்கிச்சூடுகள்