இலங்கையை புகழ்ந்து பாராட்டும் வசீம் அக்ரம்
உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
இலங்கையின் இயற்கை அழகையும், தமக்கு இந்த நாட்டுடன் இருக்கும் பல தசாப்த கால பிணைப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் உலகம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்திருந்த போதிலும், தமக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை எப்போதும் இருந்து வருவதாக அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
தமது பயணங்களின் போது தாம் கண்டவற்றில் இலங்கையின் இயற்கை நிலப்பரப்புகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகள் ஆகியவை மிகவும் அழகானவை என வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஏன் இன்னும் உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படவில்லை என்பது குறித்துத் தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 1985ஆம் ஆண்டில் ஒரு இளைஞனாக முதன்முதலில் இலங்கைக்கு விஜயம் செய்ததாகக் குறிப்பிட்ட அக்ரம், அதன் பின்னர் ஒரு வீரராக, வர்ணனையாளராக மற்றும் சுற்றுலாப் பயணியாகப் பலமுறை இங்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தொடர்ந்தும் வழக்கமாக வருகை தரத் திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை மேலும் சுற்றிப்பார்க்க விரும்புவதாகவும் வசீம் அக்ரம் மேலும் கூறியுள்ளார்.