தமிழர் பகுதிகளில் காணி அபகரிப்பு: உடனடி நடவடிக்கை எடுக்க அரசு மீது கோரிக்கை
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான பணியகத்தின் தலைவருடன் நடைபெற்ற சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று(27.04.2026) கட்டைக்காடு பங்குத் தந்தை வசந்தன் தலைமையில் கட்டைக்காட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வடமராட்சி கிழக்கில் தேசியப் பூங்கா அமைப்பதற்காக அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான பணியகத்திடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர் பகுதியில் நடக்கும் காணி அபகரிப்பு
தங்களது பிரதேசத்தில் பாரம்பரியமாக நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட கடல் நீர் ஏரிகளும், 800 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களது அன்றாட சமையல் தேவைகளுக்குக் கூட விறகு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதேபோல், தங்களது சொந்த காணிகளில் உள்ள பனைமரங்களில் இருந்து பனம் மட்டைகள் பெற்றுக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பலர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையை மாற்றி, சம்பந்தப்பட்ட காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வனஜீவராசிகள் பாதுகாப்புப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள தாழையடி, சுண்டிகுளம் வீதியைப் புனரமைப்பதற்கும் வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தையிட்டி ஆக்கிரமிப்பு
இதேவேளை, வேலன் சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள், குறிப்பாக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை இதுவரை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் அநுர அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை.
படையினருக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளில், படையினரே விவசாயம் செய்து, அந்த உற்பத்திகளை மக்களுக்கே விற்பனை செய்கின்ற நிலை காணப்படுகின்றது.

தையிட்டி ஆக்கிரமிப்பு உட்பட அரசால் மேற்கொள்ளப்பட்ட அபகரிப்புகளில், ஒரு துண்டு நிலம் கூட மக்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. அத்துடன், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய ஒற்றுமை பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,
காணி விடயங்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதேச மக்களுக்கும், ஆளுநர் மற்றும் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளடங்கலாக ஒன்று கூடல் ஒன்றினை நடத்தி ஜனாதிபதியுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அபரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வன ஜீவராசிகள் திணைக்களத்தால் தேசிய பூங்காவிற்காக சுவீகரிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச மக்களுடைய அனைத்து காணிகளும் விடுவிப்பதற்கு ஏதுவாக குறித்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.