காடுகளை பாதுகாக்கும் பெயரில் மக்கள் காணி அபகரிப்பு: வடக்கு மாகாண ஆளுநர் விசனம்
காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே நாம் எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“மிக நீண்ட காலப் போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்களது காணிகள் ஆள்நடமாட்டம் அற்ற நிலையில் அவையே காடுகளாக வளர்ந்துள்ளன.
சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படை
அவற்றை கூகுள் வரைபடம் மூலமே வனவளத் திணைக்களம் வன உயிரிகள் திணைக்களம் என்பன தமக்குரியதாக அடையாளப்படுத்தி 2012ஆம் ஆண்டின் பின்னர் அரசிதழ் வெளியிட்டுள்ளன.
போரின் பின்னர் கூகுள் வரைபடத்தை மாத்திரம் பயன்படுத்தி, கள அலுவலர்களுக்கும், பிரதேச செயலர், மாவட்டச் செயலர் ஆகியோருக்கும் தெரியாமலேயே அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
அதுவே தற்போதுள்ள சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |