காணி பிணக்குகள் தீர்த்து வைக்கப்படாத நிலையில் புதுக்குடியிருப்பு மக்கள் - மக்கள் விசனம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக்களின் காணிப்பிணக்குகள் தீர்த்து வைக்கப்படாத நிலை தொடர்ந்து வருவதால் மக்கள் பல்வேறு சிரமங்களை முகம் கொடுத்து வருகின்றதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,
குறிப்பாக அரசாங்கத்திற்குக் காணியினை வழங்கி, மக்களுக்கான மாற்றுக்காணியினை பெற்றுக்கொடுக்காத நிலை காணப்படுகிறது. பல மக்களின் காணிகளுக்கான ஆவணம் இல்லாத நிலையில் மக்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
குறிப்பாக நகரின் அபிவிருத்தி தேவைக்காகப் பொதுமக்களின் காணிகள் அரச திணைக்களங்களால் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அவர்களில் சிலருக்கு மாற்றுக்காணிகள் இன்னும் வழங்கி வைக்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.
பலமக்களின் காணிகளுக்கான ஆவணங்கள் இதுவரை பிரதேச செயலகத்தினால் பெற்றுக்கொடுக்கப்படாத நிலை தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதால் வடமாகாண காணி ஆணையாளர் மற்றும் மாகாண ஆளுநருக்குத் தெரியப்படுத்திக்கூட இதுவரை இதற்கான தீர்வு முன்வைக்கப்படவில்லை.
விரைவில் காணிக்கச்சேரி நடத்தி மக்களின் காணிப்பிணக்குகளை பிரதேச செயலகம் தீர்த்துவைக்க வேண்டும் என்றும், இவ்வாறு காணிப்பிணக்குகள் தொடர்ச்சியாகக் காணப்படுவதால் பல குடும்பங்களுக்கிடையில் வன்முறை,குடும்ப பிரிவு கூட ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
அதிகளவான காணிகளுக்கு ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் ,
கடந்த காலத்தில் தேர்தல் வந்தபோது தேர்தல் முடிந்த பின்னர் செய்வோம் என்று
சொன்னவர்களால் இப்போது கோவிட் காலத்தில் ஒன்றும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாகப்
பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.