குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட பௌத்த கட்டுமானம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாணைகள் இன்று(27) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நீதிமன்ற கட்டளைகளை மீறி கட்டுமானப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரச சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்துள்ளனர்.
இதனை ஆலய தரப்பு சட்டத்தரணிகள் எதிர்த்திருந்த நிலையில் பல மணி நேர வாத விவாதங்களின் பின்னர் நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் 04.07-2023 அன்று குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் கட்டளை வழங்க வழக்கு விசாரணைகளை ஆடி மாதம் நான்காம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ். தனஞ்சயன் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் AR/673/18 என்னும் குருந்தூர் மலை தொடர்பான வழக்கானது
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே, விளக்கத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே நாங்கள் 3 ஆம் மாதம் குறித்த பிரதேசத்திலே ஏற்கனவே நீதிமன்றால்
வழங்கப்பட்ட இரண்டு கட்டளைகளுக்கு எதிராக ஏற்கனவே நீதவான் நீதிமன்றிலே
மேம்படுத்தல் வேலைகள் எவையும் கட்டுமான வேலைகள் எவையும் செய்யக்கூடாது என்ற
கட்டளை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நீதிமன்றக்கட்டளைகளை மீறி தொல்பொருள் திணைக்களத்தினால் விகாரைக் கட்டுமானங்கள் நினைவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நாங்கள் நகர்த்தல் பத்திரம் அனைத்தும் சமர்ப்பணம் செய்திருந்தோம். அந்த சமர்ப்பணத்திலே மேம்படுத்தல் வேலைத்திட்டங்கள் தொடர்பான சான்றுகளை புகைப்படங்கள் ஊடாகவும் நாங்கள் வெளிக்காட்டியிருந்தோம். அது தொடர்பாக பதிலை வழங்குவதற்காக இன்றைய தினம் குறித்த வழக்கானது நியமிக்கப்பட்டிருந்தது.
சட்டவிரோத கட்டுமானம்
இந்நிலையில் இன்றைய தினம் தொல்பொருள் திணைக்களத்தின் சார்பில் சிரேஸ்ட அரசவாதிகள் நீதிமன்றிலே தோன்றி சமர்ப்பணங்களை செய்திருந்தனர். அதிலே குறிப்பிட்ட கட்டுமானம் சட்டவிரோதமாக மேற்கொள்ளவில்லை என தெரிவித்திருந்தனர்.
குறித்த கட்டுமானம் சட்டவிரோதமானது என எமது கவனத்தை தெரிவித்தோம். இது தொடர்பாக கட்டளை வழங்கிய நீதிமன்றமானது குறித்த இடத்துக்கு மீள கள விஜயம் மேற்கொண்டு அந்த கள விஜயத்தின் அடிப்படையில் குறித்த மேம்படுத்தல் வேலைகள் இடம்பெற்றனவா சட்டவிரோத செயற்பாடுகள் நீதிமன்ற கட்டளையை அவமதித்து இடம்பெற்றனவா என்பது தொடர்பாக தீர்ப்பளிப்பதற்காக ஏழாம் மாதம் நான்காம் திகதிக்கு தவணையிடப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குருந்தூர்மலை விவகாரத்தில் அவ்வாறு நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் 30.03.2023ஆம் திகதியன்று நீதிமன்றில் தோன்றி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரணராஜா உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய குறித்த வழக்கானது முல்லைத்தீவு 30.03.2023 அன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது தொல்லியல் திணைக்களம் சார்பில், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க உள்ளிட்ட குழுவினரும், பொலிஸாரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
நீதிமன்றிடம் விண்ணப்பம்
இதன்போது தமது சிரேஸ்ட சட்டத்தரணிகளும், சிரேஸ்ட அலுவலர்களும் நீதிமன்றிற்கு வரமுடியாத காரணத்தினால், தமது விளக்கங்களைச் சமர்ப்பிப்பதற்கு பிறிதொரு தவணையினை வழங்குமாறு பொலிஸாரும், தொல்பொருள் திணைக்களம் சார்ந்தவர்களும் நீதிமன்றிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில் குருந்தூர்மலைப் பிரதேசத்திலே நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரைக்குரிய கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதானது, நீதிமன்றத்தை அவமதித்து இடம்பெறுகின்ற செயற்பாடு என, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்தோடு பொதுமக்கள் நீதிமன்றின் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்க கூடியதொரு செயற்பாடு எனவும் இதன்போது ஆலய நிர்வாகம் சார்பான சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை குறித்த குருந்தூர் மலைப் பிரதேசத்திற்கு நீதவான் அவர்கள் நேரடியாக வருகைதந்து அங்கு இடம்பெறும் விடயங்களை பார்வையிட்டு, ஏற்கனவே இருந்த நிலையை விட புதிதாக கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அல்லது மேம்படுத்தல் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதனைப் பார்வையிட்டு, அதனடிப்படையில் வலிதான கட்டளை ஒன்றினை வழங்க வேண்டுமெனவும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் இருதரப்பு சமர்ப்பணங்களைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் மற்றும், பொலிஸார் அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்காக இன்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
