குமார் சங்கக்காரவின் சிலை! யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் தகவல் (Photos)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அதற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்படுவதற்காக குமார் சங்கக்காரவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை முதல் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் உட்பட நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, பல்கலைக்கழகத்தினுள் குமார் சங்ககாரவுக்கு சிலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
சிலை அமைப்பதற்காக எவரும் அனுமதி கோரவில்லை. வளாகத்தினுள் சிலைகளை நிறுவுவதென்பது நீண்ட பொறிமுறைகளைக் கொண்டது.
இது தொடர்பான அனுமதி எதனையும் வழங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - தீபன்
முதலாம் இணைப்பு
சமூக வலைத்தளங்களில் இன்று அதிகமாக பகிரப்பட்டு வரும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரின் சிலை தொடர்பான புகைப்படங்கள் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவின் சிலை குறித்த புகைப்படங்களே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றன.
குறித்த சிலையானது மூன்றரை அடி உயரமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரின் முயற்சியில் இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சிலையானது யாழ். பல்கலைக்கழகத்திற்காக உருவாக்கப்பட்டது எனவும் சமூக வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

