கோவலன் கண்ணகி புராண சரித்திர நாடகம் கூத்துவடிவில் அரங்கேற்றம்!
முல்லைத்தீவு- வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கலையும்,முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய பொங்கலையும் முன்னிட்டு முள்ளியவளை கலைஞர்களால் தொன்று தொட்டு நடித்து வரும் கோவலன் கண்ணகியின் சரித்திர வரலாற்றினை கூத்து வடிவில் ஆற்றுகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வானது நேற்று (31)முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர் அருட்குகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் குருக்கள் ரகுநாதகுருக்களும் சிறப்பு விருந்தினர்களாக காட்டுவிநாயர் ஆலய நிர்வாக தலைவரும் சட்டத்தரணியுமான க.பரஞ்சோதி உள்ளிட்டவார்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
கூத்து ஆற்றுகை
இதன்போது கூத்தின் அண்ணாவிமார்களாக து.கஜன்,க.இந்துசன் மற்றும் உடை அலங்காரத்தின் து.காந்தனும் கௌரவிக்கப்பட்டு நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.
முள்ளியவளை கலைஞர்களின் சிறப்பான நடிப்பில் கோவலன் கண்ணகியின் சரித்திர வரலாற்று கூத்து ஆற்றுகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கூத்தினை தொடர்ந்து வரும் திங்கட்கிழமை (02.06.2025) வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கலுக்கான தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து நடைபெற்று முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் கடல்நீர் தீர்த்தம் எடுக்கப்பட்டு முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்நிதானத்தில் ஏழு நாட்கள் அணையா விளக்காக அங்கு எரிக்கப்படும்.
அத்தோடு, ஞாயிற்றுக்கிழமை (08.06.2025) முள்ளியவளை காட்டுவிநாயகர் பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து அங்கு எரிக்கப்படும் தீர்த்தம் மடைப்பண்டங்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் எடுத்துசெல்லப்பட்டு 09.06.2025 அன்று பொங்கல் நிகழ்வுகள் சிறப்புற நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







