கிவுல்ஓயா திட்டம் என்பது தமிழினவழிப்பில் முன்னேறிச் செல்லும் சிங்கள அரசு!
இலங்கைச் சிங்கள அரசு மகாவம்ச மனநிலையிலேயே கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
மகாவம்சத்தின் அடிப்படை கோட்பாடாகிய “தம்ம தீப“ கோட்பாட்டை முற்று முழுதாக நடைமுறைப்படுத்துவதுதான் இலங்கை அரசை ஓட்டிச் சொல்லுகின்ற அரசாங்கங்களும், அதன் தலைவர்களும் ஒரே இலக்காக கொண்டுள்ளனர். அதற்கு இன்றைய எம்.பி.பி அரசாங்கமும் விதிவிலக்கு அல்ல.
சிங்கள ஆளுங்கட்சியினர் தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காக நாட்டப்படுகின்ற அடிக்கற்களை அடுத்து வருகின்ற ஆளுங்கட்சியினர் அதை மேலும் ஒரு படி வளர்த்துச் சென்ற வரலாற்றையே இலங்கைத் தீவு கொண்டுள்ளது.
சிங்களக் குடியேற்றம்
அந்த அடிப்படையில் தமிழர் தாயகத்தை வெட்டிப் பிளக்கின்ற, தமிழர் தாயகத்தை சிதைக்கின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை அனைத்து சிங்கள தலைவர்களும், அனைத்து சிங்கள அரசாங்களும் முன்னெடுத்தன என்பதனை வரலாற்று ரீதியில் பார்ப்பது அவசியமானது.
கி.பி ஆறாம் நூற்றாண்டில் மகாநாம தேரரிடம் எழுந்த பௌத்த சிங்கள மக்களுக்கான தீவு என்ற இலட்சியவாத கருத்தியல்(ideology) அவரால் உருவாக்கப்பட்ட மகாவம்சம் என்ற புணை கதை நூலில் 1)இலங்கை இலங்கை தீவு பௌத்த மதத்தின் பொருட்டு புத்தபிரானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு.

2)விஜயனே இலங்கையின் முதல் மனிதன். 3) விஜயனும் அவனது வழித்தோன்றல்களுமே பௌத்தத்தை பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 4) விஜயனுடையதே இலங்கை அரசு. என்ற அடிப்படையில் தனது இலட்சிய வாதக் கருத்தியல் மகாவம்ச நூலில் மூலம் வெளிப்படுத்தினார். அதனையே பௌத்த சிங்கள மக்களின் கருத்தியலாக(ideology,) மாற்றி அமைத்தும் விட்டார்.
அந்த அடிப்படையில் உருவானதுதான் “தம்மதீப“ என்ற கோட்பாடு. இது இனம், மதம், மொழி, நாடு, அரசு ஆகிய ஐந்து அம்சங்களையும் ஒன்றாகப் பின்னிப்பிணைந்த ஒரு கோட்பாடு. இந்த கோட்பாடு இலங்கை தீவில் சிங்கள பௌத்தர்களை தவிர வேறு யாரையும் இந்த நாட்டின் குடிகள் அல்ல என நிராகரிப்பதாகும்.
இந்தத் தம்மதீப கோட்பாட்டையே தமது இலட்சிய வாதமாகக் கொண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றை வரைக்கும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த தேரவாத பெளத்த அரசாங்கங்களும் அதன் தலைவர்களும் தமிழின அழிப்பை தொடர்ந்து படிமுறையாக வளர்த்து முன்னேரி சென்றிருக்கின்றனர்.
இலங்கைத் தீவில் வட-கிழக்கை தமது பூர்வீக தாயகமாகக் கொண்டு வாழும் ஈழத்தமிழ் மக்களை இந்த தீவில் இருந்து அழித்தொழிப்பதற்கு சிங்கள தேசம் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது.
இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களும், அதன் நீண்ட கடற்கரையும் ஈழத்தமிழ் மக்களின் தாயகமாக இருப்பதனாலும் அதேநேரம் பாக்கநீரிணைக் கடற்கரையின் மறுபக்கத்தில் இந்தியத் தமிழர்கள் வாழ்வதனாலும், இரண்டு பக்க கடற்கரைகளும் தமிழர்கள் வாழ்வது புவியியல் அமைவிட அண்மைத்தன்மை(Geographical Proximity), மற்றும் புவிசார் கேந்திர முக்கியத்துவம் (Geo-strategic importance)
தமிழர் தாயகம்
இதன் காரணமாக பௌத்த சிங்கள அரசுக்கு எப்போதும் அச்சுறுத்தல் என்பதனை பௌத்த சிங்கள தேசம் நன்கு உணர்ந்து இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் முதற்கட்டமாக வடக்கு கிழக்கு என்ற இரண்டு பெரும் பிரதேசங்களை தமிழர் தாயகமாகக் கொண்டிருப்பதனால் புவிசார் அரசியலில் (Geopolitics) தமிழர் தாயகம் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.
ஈழத்தமிழருக்கே உரித்தான இந்த புவிசார் அரசியலை உடைத்தெறிவதற்கு புதிய சிங்களக் கொடியேற்ற திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் அரசியல் புவியியலை(Political Geography). மாற்றி தமிழர்களுடைய குடித்தொகை பரம்பலை சிதைத்து, நிலத்தை அபகரித்து, தமிழர் தாயகத்தை இரண்டாக உடைப்பதற்காகவே 1949 ஆம் ஆண்டு டி எஸ் சேனநாயக்க பட்டிப்பளை ஆற்றை சிங்களத்தில் கல்ஓயா என பெயர் மாற்றப்பட்டு கல்ஓயா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

பட்டிப்பாளை ஆற்றிக்கு குறுக்கே அணை கட்டப்பட்டு சேனநாயக்கர் சமுத்திரம் என்ற நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. அங்கு விவசாய விருத்தி என்ற பெயரில் புதிய சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு பல கிராமங்கள் இல்லாது அழிக்கப்பட்டது.
அது மாத்திரமல்ல1956ம் ஆண்டு சிங்கள குடியேற்றவாசிகளினால் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதனால் அந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களை முற்று முழுதாக வெளியேற்றி சிங்களமயமாக்கப்பட்டு விட்டது.
அதனையடுத்து மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களை இலக்குவைத்து மகாவலி ஆற்று வடிநில அபிவிருத்தி என்று திட்டமிட்ட சிங்கள குடியேற்றதிட்டம் வரையப்பட்டது.
இந்த மகாவலி அபிவிருத்தித்திட்டம் முதலில் 1961-ல் இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டது. ஆயினும் 1970ல் பிரதமர் டட்டலி சேன நாயக்க மற்றும் நிலம், நீர்ப்பாசன மற்றும் சக்தி அமைச்சர் சீ.பி.டி சில்வா இணைந்து தமிழர் தாயக நிலப்பரப்பில் இரண்டாவது திட்டமிட்ட புதிய சிங்களக் கொடியேற்றத்திற்கான அடிக்கல்லை மகாவலி அபிவிருத்தி திட்டம் மூலம் நாட்டினர்.
அதனையடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த போது மகாவலி திட்டத்தின் முதல் கட்டுமான பணிகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டு குடியேற்றங்களை நிறுவும் பணிகள் செயல்படுத்தப்பட்டன. இதுவே அல்லை, கந்தளாய் வரை பரவி தமிழர் தாயகமான கிழக்கு மாகாணத்தை மூன்று துண்டுகளாக வெட்டி பிளந்து விட்டனர்.
அம்பாறையிலும், திருகோணமலையிலும் சிங்களக்குடியேற்றத்தால் இரண்டு இடங்களில் தாயக நிலத்தின் தொடர்ச்சி வெட்டப்பட்டதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களும் தனித்தனியாக பிளக்கப்பட்டு தமிழர் தாயகத்தின் தொடர்ச்சி அறுக்கப்பட்டது. இதுவும் ஒருவகை தமிழின படுகொலைதான்.
தமிழர்களின் புவிசார் அரசியல் பலத்தை சிங்கள குடியேற்றம் என்ற அரசியல் புவியியலால் வெற்றிகொண்டு சிங்கள மக்கள் அப்பகுதியில் வலுப்படுத்தப்பட்டுவிட்டது.
மகாவலி ஆற்று அபிவிருத்தி திட்டம்
மகாவலி ஆற்று அபிவிருத்தி திட்டம் என்ற அடிப்படையில் தமிழர் தாயத்தின் நிலப்பரப்பில் புதிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியமையும், அதனால் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர் பிரதேசங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டமையும், பல கிராமங்கள் நீர்த்தேக்கங்கள் மூழ்கிப்போனமையும், அந்தப் பிரதேசத்தின் இயற்கையான குடித்தொகை பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தி பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்கள் தமிழர்களை அவர்களுடைய நிலத்தில் சிறுபான்மையாக்கிய நடவடிக்கையை இனப்படுகொலை என்றுதான் ஐ.நா சாசனம் வரையறுக்கிறது.
அதே நேரத்தில் புதிய குடியேற்றங்களால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் மனிதப்படுகொலை செய்யப்பட்டு பல கிராமங்கள் இல்லாதொழிந்து போய்விட்டது. இத்தகைய சூலமைவில் ஆயுதப் போராட்டம் வலுவடைந்து தமிழர் தாயகத்தின் பெரும்பகுதி தமிழர் சேனையின் கட்டுப்பாட்டில் வந்த போது புதிய சிங்கள குடியேற்றங்கள் சற்று குறைவடைந்து இருந்தன.

இவ்வாறு இருந்த போதும் இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் மகாவலி அபிவிருத்தி எல் வலயதுக்குள் முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய மணலாறு பிரதேசத்தில் 1988 இல் மணலாறு சிங்கள குடியேற்றத்தை வெளிஓயா என பெயர்மாற்றி இலங்கை அரசு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தமையும் இங்கே குறிப்பிட்டுச் செல்ல வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கான ஒரு தீர்வுத்திட்டத்தை இந்தியா தனது ஒன்றரை லட்சம் படைகளை நிறுத்தி வடகிழக்கில் முன்நின்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் தமிழர் தாயகத்தை துண்டாடி இனவழிப்புச் செய்வதில் கண்ணும் கருத்துமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா செயற்பட்டுள்ளார் என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இந்த மணலாறு குடியேற்றம் வடக்கு- கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்ச்சி அறுத்த தமிழர்தாயக கோட்பாட்டை சிதைப்பதே அன்று ஜே.ஆர் க்கு உடனடித் தேவையாக இருந்துள்ளது. இன்னும் ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், மகாவலி அபிவிருத்தி வலயம் என்று பகுதிக்குள் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் பல பகுதிகள் உள்ளடங்குகின்றன.
ஆயினும் இந்த மூன்று மாவட்டங்களுக்கும் மகாவலி நதியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட இன்றுவரை கொண்டு வரப்படவில்லை. அவ்வாறு கொண்டு வருவதற்கான எந்த வாய்ப்புகளும் எதிர்காலத்திலும் இல்லை.இவ்வாறு இருக்கையில் வடமாகணத்தின் இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள நிரப்பரப்புகளை ஏன் மகாவலி அபிவிருத்தி வலயத்துக்குள் உள்ளடக்க வேண்டும்.
ஏனெனில் இந்த மாவட்டங்கள் முற்றும் முழுதும் தமிழர் வாழும் மாவட்டங்களாக இருப்பதனால் அரச அதிகாரிகள், மற்றும் நாடாளுமன்றம் உள்ளூராட்சி உறுப்பினர்களும் தமிழர்களாக இருப்பதனால் இந்த மாவட்டங்களின் அதிகாரத்தை பிடுங்கி எடுப்பதற்காக மகாவலி அபிவிருத்தி வலயத்துக்குள் உள்ளடக்கிவிட்டால் அந்த பிராந்தியம் மகாவலி அவ்விருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும்.
ஆகவே அந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எந்த நடவடிக்கையும் தமிழ் பிரதிநிதிகளால் எதனையும் செய்து விட முடியாது என்பதுவே இதனுடைய சூக்குமாகும். ஆயினும் முள்ளிவாய்க்கால் பேரழிவும் தோல்விக்கும் பின்னர் தமிழர் தாயகத்தில் நிலப்பறிப்பு, நில அபகரிப்பு எந்தத் தங்கு தடையும் இல்லாமையினால் தற்போது புதிய சிங்கள குடியேற்றங்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இப்போது மணல் ஆற்றுப் பிரதேசத்தில் ஏற்கனவே குடியேற்றப்பட்ட சிங்களக் கொடியேற்றவாசிகளுக்காகவும், புதிதாக உருவாக்கப்படுகின்ற சிங்கள குடியேற்றவாசிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளையும், புதிய பயிர் செய்கை நிலங்களையும் வழங்கும் திட்டம் தான் கிபுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம்.
இந்த கிவுல் ஓயா நீர்த்தேக்கத்திட்டம் எனப்படுவது பெரியாறு அல்லது பேராறு இன்று தமிழர்களால் அழைக்கப்படும் சிங்கள மொழியில் மாஓயா அழைக்கப்படுகின்ற ஆற்றையும் சூரியன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளையும் மறித்து சுமார் 4.41 கி.மீ. நீளமானதும், 18.9 மீட்டர் வரையான உயரமுடைய அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டு பாரிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படும்.
கிவுல் ஓயா திட்டம்
இது சுமார் 64.33 மில்லியன் கியூபிக் மீட்டர் (MCM) நீரை சேமிக்கக் கூடியதாக அமையும். இந்தப் பாரிய நீர்பாசன திட்டத்தைத்தான் சிங்கள மொழியில் “கிவுல் ஓயா திட்டம்“ என சொல்லப்படுகிறது.
இந்த திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு கரைத்துறைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிலும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள தமிழ் மக்களின்பூர்வீக குளங்கள் மற்றும் வயல்காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் காட்டு நிலங்கள் என்பவற்றை கபளீகரம் செய்வதோடு அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்களை வெளியேற்றி தமிழர் தாயகத்தை அழிக்கும் மூலோபாயத்தையே இத்திட்டம் கொண்டுள்ளது.

ஏற்கனவே பல தமிழ் பூர்வீக கிராமங்கள் மணலாறு கொடியேற்றத் திட்டத்தால் விழுங்கப்பட்டு விட்டது. இவ்வாறாக கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கு பிரதேச செயல பிரிவுக்கு உட்பட்ட இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் ஆகிய சிறியநீர்ப்பாசனக்குளங்களும், இக் குளங்களுக்கு கீழான நீர்ப்பாசன வயல்களும் மற்றும் வெடிவைச்சகல்லு குளத்தின்கீழ்வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் ஆகியவற்றின் வயற்காணிகளும், நெடுங்கேணி பிரதேசத்திலுள்ள பூர்வீக தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளடங்களான பாரியதொரு தமிழர் பிரதேசம் கீழே ஓயா நீர்த்தேக்க அணைக்கட்டின் நீர் பிடிப்பு பகுதிக்குள் அமிழ்து போகும்.
இதன் மூலம் தமிழர்களின் பூர்வீக நிலம் நீரேந்துப்பகுதிகளாக மாறும் அதேசமயம் புதிய சிங்கள குடியேற்ற திட்டத்திற்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். இந்த வகையில் பார்க்கிற போது தமிழர் நிலத்தை அழித்து தமிழின படுகொலையை செய்து புதிய சிங்களம் குடியேற்றம் வாழ வைக்கப்படும்.
அதே நேரத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பூர்வீக தமிழ் கிராமங்களான கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மையம், கொக்குத்தொடுவாய் தெற்கு, கருணாட்டுகேணி, செம்மலை, செம்மலை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் உள்வாங்கப்பட உள்ளது.
இதன் மூலம் இந்தப் பிரதேச செயலகத்தின் குடித்தொகை பெரம்பலில் சிங்கள குடிமக்களின் தொகையை அதிகரிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது. பிரதேசத்தின் குடித்தொகை பரம்பரைமாற்றி அமைப்பதும் இனப்படுகொலை என்ற பகுதிக்குள்ளேயே அடங்கும். கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்திற்கு 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழின படுகொலை
இந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் சுமார் 6000 ஏக்கர் நீர்ப்பாசன விவசாயக் காணிகள் வெலிஓயாவில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் 3000 பேருக்கு வழங்கப்படவுள்ளன. கிவுல் ஓயா திட்டத்துக்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2011ல் அங்கீகாரம் வழங்கியிருந்தது. பல தடங்கல்களுக்கு மத்தியில் 2022–2023 பொருளாதார நெருக்கடி காலத்தில் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இப்போது அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் அதனை 2026–2031 நிதியாண்டுக்குள் திட்டத்தை நிறைவு செய்யும் வகையில் அமைச்சரவை தற்போது மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுமார் 2.5 பில்லியன் ரூபா (மொத்த திருத்தப்பட்ட செலவு சுமார் 23,456 மில்லியன் ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கே இலங்கை அரசகட்டில் மன்னன் அமர்ந்தால் என்ன கழுதை அமர்ந்தால் என்ன அல்லது குரங்குதான் அமர்ந்தால் என்ன அவைகள் அனைத்தும் மகாவம்ச மனநிலையில் நின்று கொண்டே ஆட்சி அதிகாரத்தை செலுத்தும். அவை இலங்கை அரச இயந்திரத்தை தமிழின படுகொலைக்காகவே பயன்படுத்தும்.
காலத்துக்கு காலம் தமிழினம் பல புதிய சிங்கள அரசாங்கங்களைக் கண்டுள்ளது. அனைத்தும் இனப்படுகொலையே முன்னெடுத்தன. இப்போது புதிய அரசாங்கம் வந்துவிட்டது என்று அனுராவை புகழ்ந்து கொண்டிருக்கிறது எலும்புத் துண்டுக்காகவும் ஒரு தமிழர் கூட்டம்.ஆனாலும் தமிழர் தாயகத்தை சிதைக்கும் நடவடிக்கையை அநுர அரசாங்கம் வேகமாக முன்னோக்கி நகர்த்துகிறது.
ஆகவே இலங்கை தீவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தமிழின படுகொலையை மேலும் மேலும் ஒரு படி முன்னேற்றி நகர்த்திச் சென்ற வரலாறை பதிவாகி இருக்கிறது. தமிழ் மக்கள் தமக்கான சுயநல உரிமையை போராடி வென்றெடுத்தாலே அன்றி தமிழர் தாயகத்தை ஒருபோதும் பாதுகாத்திட முடியாது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 06 February, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri
சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam