பச்சிலைப்பள்ளி தவிசாளரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள அரசாங்க அதிபர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களிற்கு அரசினால் வழங்கப்படும் உதவிகள் உரிய காலப்பகுதிக்குள் கிடைப்பதில்லை என்ற பச்சிலைப்பள்ளி தவிசாளரின் கருத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மறுத்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 6ம் திகதி கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் கருத்து தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கான உதவிகள் உரிய காலப்பகுதியில் கிடைப்பதில்லை எனவும், தனிமைப்படுத்தல் காலப்பகுதி நிறைவு பெற்றதன் பின்னரே கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தமது பிரதேச சபையினால் உதவிகளை அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிற்கு வழங்கி வருவதாகவும், மாவட்ட செயலகத்தின் இழுபறி நிலையே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர்,
குறித்த உதவிகள் உரிய காலப்பகுதியில் அவர்களிற்கு கிடைக்கப்பெறுவதாகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விபரம் திரட்டப்பட்டு வழங்கப்பட்டதன் பின்னர் உடனடியாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை எனவும்,
அவ்வாறு கிடைத்தால் அதற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.