கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு பிரதான வீதியை புனரமைத்துத் தருவதாக வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (19) கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
மேற்குறித்த பகுதியில் 350இற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இக்கிராமத்திற்கான பிரதான வீதி மற்றும் சேதமடைந்த பாலம் என்பவற்றை புனரமைத்து தருமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு காலத்துக்கு காலம் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அந்த வீதிகள் இதுவரை புனரமைக்கப்படவில்லை.
வீதி சீரின்மை
இதனால் குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், கர்ப்பவதிகள் என பலரும் பல்வேறு அசௌகரிகளுக்கு மத்தியில் தங்களுடைய போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்திற்கு பாடசாலை பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்ட போதும் வீதி சீரின்மையால் அது இடம்பெறுவதில்லை எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
புனரமைப்பதற்குரிய நடவடிக்கை
இவ்விடயம் தொடர்பாக இன்றைய தினம் கண்டாவளைப் பிரதேச செயலாளரை பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று வினவிய போது சம்பந்தப்பட்ட திணைக்களமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் இன்றும் மக்களின் போராட்டம் தொடர்பாகவும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்பொழுது பயன்பாட்டில் உள்ள மாற்று வீதி கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் தற்பொழுது வரை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக அவ்வீதியை மக்களின் பாவனைக்காக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 2016 ஆம் ஆண்டு காலப் பகுதியின் வரைபடத்தில் பாதையுள்ளதாகவும் எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய பாதையினை மக்கள் பாவனைக்கு வழங்கி புனரமைப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
