கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அலுவலகத்தில் விசாரணைகள்
கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அலுவலத்தில் கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் மகிழங்காடு கமக்கார அமைப்பு ஆகியவற்றின் நிதி முறைகேடுகள் தொடர்பிலான மேலதிக ஆவணங்களையும் தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று மேலதிக விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப் பகுதிகளில் அறவிட்டப்பட்ட பலகோடி நிதி தொடர்ச்சியாக உரிய கணக்கு முறைகள் பேனப்படாமல் வங்கிகளில் வைப்பிலிடப்படாமலும் கூட்டத் தீர்மானங்கள் இன்றியும் தான்தோன்றித்தனமாக நிதி செலவீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் ஊடாக போலியான கையொப்பங்களை பயன்படுத்தி முறைகேடாக மகிழங்காடு கமக்கார அமைப்பின் ஊடாக மானிய உரம் பெற்றுக் கொள்ளப்பட்மை மற்றும் மானிய உரத்திற்கான நிதிகளை பெற்றுக் கொண்டமை என பல்வேறு குற்றச்சாட்டுகள் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சிக்கு வருகை தந்த தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளால் இரத்தினபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நிதி முறைகேடுகள் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு இரணை மடுக்குளத்தின் திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த பற்றுச்சீட்டு புத்தகங்கள் மற்றும் சில ஆவணங்களையும் அதன் பிரதிநிதிகளையும் பெற்றுச் சென்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் கிளஇநொச்சி கம நல சேவை நிலையத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் கமக்கார அமைப்புக்களால் சமர்ப்பிக்கப்படும் உரமானிய பட்டியல்கள் மற்றும் மேலதிக ஆவணங்களையும் பெற்றுச் சென்றனர்.
இதனையடுத்து கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள பிரதி ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று சம்மேளனத்தின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அதன் மேலதிக விசாரணைகளுக்காக சில ஆவணங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு கமநல அவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயக்கத்தினால் இவ்வமைப்பினது பதிவு இலக்கம் தொடர்பில் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்ட போதும் அதனை உதாசீனம் செய்து தொடர்ச்சியாக நிதி சேகரிப்பு மற்றும் நிதி செலவுகளை செய்து வந்துள்ளமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


