“தோல்வி தொடர்பில் இலங்கையிடம் இருந்து பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்” கென்ய அரசாங்கத்துக்கு அழுத்தம்!
அனைத்து விவசாய இரசாயனங்களையும் தடை செய்வதன் மூலம், உலகின் முதல் சேதன பசளை நாடாக மாறப்போவதாக கூறி இலங்கையின் செய்த தவறில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ளுமாறு கென்ய அதிகாரிகளுக்கு அந்த நாட்டு ஊடகங்கள் வலியுறுத்தியுள்ளன.
பிசினஸ் டெய்லி ஆப்பிரிக்கா என்ற செய்தித்தாளில், நைரோபியைச் சேர்ந்த செய்தியாளரும் தொழிலதிபருமான ஜென்னி லூஸ்பி (Jenny Luesby) இதனை வலியுறுத்தியுள்ளார்.
மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமானால், தமது நாட்டின் நாடாளுமன்றக் குழுக்களும் விவசாய அமைச்சும் இலங்கையை நன்றாகப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.
எனவே சிறந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் முன்னர் அவற்றின் தாக்கத்தை பார்ப்பது சிறந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கென்யாவின் நிறுவனம் ஒன்று, நாட்டின் பெரும்பாலான பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் யோசனையை முன்வைத்துள்ளது
இதனை மேற்கொண்டதன் காரணமாக, இலங்கை, மிகப்பெரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஜென்னி லுாஸ்பி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒரு ஹெக்டேர் நிலத்தை களைகள் இல்லாமல் செய்து, அதிக உணவை உற்பத்தி செய்யக்கூடிய எந்த சேதன மாதிரியும் இன்னும் உலகில் கண்டுபிடிக்கவில்லை என்றும் ஜென்னி லுாஸ்பி சுட்டிக்காட்டியுள்ளார்.