தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள் - வெளியான CCTV காணொளி
களுத்துறை, வெட்டுமகட பகுதியில் வர்த்தகர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று காலை (28) களுத்துறை, வெட்டுமகட பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
குறிவைக்கப்பட்ட தொழிலதிபர்
தெற்கு களுத்துறை, வெட்டுமகடை பள்ளிவாசல் வீதி பகுதியில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
கார் ஒன்றில் வந்த குழுவினரால், மோட்டார் சைக்கிள் ஒன்றை இலக்கு வைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர், களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்வதற்கான விசாரணையை மூன்று பொலிஸ் குழுக்கள் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. உட்லர் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய சந்தேகநபர்கள்
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு வாகனம், களுத்துறை-மத்துகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று பிற்பகல் சிறிய வெள்ளை நிற வான் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்கு முன்னர் சந்தேகநபர்கள் வந்த வான் இதுவென்றும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் இந்த வானிலிருந்து காருக்கு மாறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.