கல்முனையில் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்
சிறுவர்களுடைய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பில் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸடீன் தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்தியத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளில் இருந்து அவர்களை பாதுகாத்து பராமரிப்பது தொடர்பாக துறை சார்ந்தவர்களுடனான உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த ஆலோசனை
மேலும் தெரிவிக்கையில், “வன்முறைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதும் வன்முறைக்குள்ளான சிறுவர்களை பராமரித்து அவர்களுக்கான சேவைகளை திறன்பட வழங்குவதற்கும் துறைசார்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும். அது அவர்களின் கடமையும் பொறுப்புமாகும்.
அந்த வகையில் சகல நிறுவனங்களும் ஒன்றுபட்டு செயல்படுகின்ற போது மாத்திரமே சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை குறைக்க முடியும்.
அத்துடன் பாதிக்கப்படுகின்ற சிறுவர்களையும் பராமரித்து அவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி, உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி, தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார மற்றும் கல்வித் திணைக்களங்களின்
அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை
உத்தியோகத்தர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,
உளவளத்துணை உத்தியோகத்தர்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர்
கலந்து கொண்டனர்.