கச்சதீவு திருவிழா! யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ள உறுதிமொழி
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்த தீர்மானம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்குரிய கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்வதில் ஒரு தெளிவின்மை காணப்பட்டது. ஏனென்றால் தற்போது நாட்டில் உள்ள கோவிட் தொற்று நிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது.
ஆரம்பத்திலேயே நாங்கள் இலங்கையிலிருந்து மாத்திரமே பக்தர்களே அனுமதிப்பதாக தீர்மானம் எடுத்திருந்தோம்.
இருந்தபோதிலும் தொடர்ச்சியாக தமிழக பக்தர்களும் கலந்து கொள்ள வேண்டும் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக அதனை பரிசீலனை செய்த வெளிவிவகார அமைச்சானது தனது சிபார்சினை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியதன் பிரகாரம் தற்போது பாதுகாப்பு அமைச்சினால் இலங்கையில் இருந்து 50 பக்தர்களும் தமிழ்நாட்டில் இருந்து 50 பக்தர்கள் மாத்திரம் இம்முறை உற்சவத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கின்றோம். மிகவும் இறுக்கமான சுகாதார அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு அமைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இம்முறை உற்சவமானது சிறப்பாக இடம்பெறவுள்ளது.
எனினும் இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவ கட்டுப்பாடுகள் குறித்து மிக
விரைவில் அறிவிக்கவுள்ளோம். அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை
முன்னெடுத்துள்ளோம். அத்தோடு பங்கு கொள்பவர்களை தீர்மானிக்கும் பொறுப்பு யாழ் ஆயர் தலைமையிலான
பங்கு தந்தைகளிடம் விடப்பட்டுள்ளது என்றார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
