ஸ்டாலினுக்கு கச்சத்தீவு காய்ச்சல் வந்துவிட்டது.. முன்வைக்கப்படும் கடும் விமர்சனங்கள்!
தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "கச்சத்தீவு இலங்கைக்குரிய இடம் அதை தமிழகம் கேட்பது நியாயமற்றது. இதை ஏற்கனவே நாங்கள் பல தடவை வலியுறுத்தியுள்ளோம்.
கச்சத்தீவு அரசியல்
தற்போது இந்தியாவில் தேர்தல் வர இருக்கின்ற நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவு விவகாரத்தை பூதாகரமாக மாற்றி அரசியல் செய்யப் பார்க்கிறார்.
கடந்த தேர்தலின் போதும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தற்போதைய தமிழக முதல்வராக இருக்கின்ற மு க ஸ்டாலினும் கச்சத்தீவை மீட்கப் போகிறோம் என தமிழக கடற்றொழில் மக்களிடம் பொய் பிரசாரம் மேற்கொண்டனர்.
அதேபோன்று இம்முறையும் கச்சத்தீவை இந்தியா மீள எடுப்பது தொடர்பில் மத்தியில் பேசப்போகிறோம் என தமிழக கடற்றொழிலாளர்களை மாற்றும் நாடகம் ஆரம்பமாகியுள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்துவிட்டது.
கச்சத்தீவை நாம் பெற்றபடியால் அதேபோன்று எட்டு மடங்கு பெரிய கடற்பகுதியை இந்தியாவுக்கு வழங்கியுள்ளோம்.
ஆகவே, எமது கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவு தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் எல்லை தாண்டி எமது கடற்பகுதிக்குள் வருகை தந்தால் இந்தியா கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்யும்” என்றார்.



