நீதவான் திலின கமகே அதிரடியாக பணியிடை நீக்கம்
மாவட்ட நீதிபதியாகவும், நீதவானாகவும் பணியாற்றிய திலின கமகேவின் கடமைகளை இடைநிறுத்த நீதித்துறை சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அவருக்கு எதிரான தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதித்துறை சேவை ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் காரணமாக இந்த இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டது.
யானை கடத்தல் சம்பவம் ஒன்றில் அவர் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குற்றப்பத்திரிகை
கடந்த ஜூன் மாதம், நீதித்துறை சேவை ஆணையம் திலின கமகே மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
மோசடியாகப் பெறப்பட்ட அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி "சகுரா" என்ற குட்டி யானையை வைத்திருந்ததன் மூலம் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில், சட்டமா அதிபர் அவருக்கு எதிராக 25 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
யானைக்குட்டி
குட்டி யானையை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கிய நிலையில் கடந்த மே 2015ஆம் ஆண்டில், யானை வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மே 2016 இல், திலின கமகே கொழும்பு கூடுதல் நீதவானாகப் பணியாற்றி வந்தபோது, நீதித்துறை சேவை ஆணையம் அவரது பணிகளை இடைநிறுத்தியது.
நவம்பர் 7, 2019 அன்று, திலின கமகே, சந்திரரத்ன பண்டார யடவர மற்றும் மேலும் இருவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவால் முன் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இருப்பினும், டிசம்பர் 16, 2021 அன்று, போதுமான ஆதாரங்கள் இல்லாததால், திலின கமகே மீதான குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தரப்பு கைவிட்டிருந்தது.




