விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் தமிழ் ஊடகவியலாளரொருவர் விசாரணை
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று காலை 9.30மணி தொடக்கம் 11.30மணி வரையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு கடலில் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளே இவ்வாறான விசாரணைகள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது கடமையினை செய்யும் நிலைமையினை ஏற்படுத்த ஜனாதிபதி முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவிட் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.