செய்தியாளர் வெளியேற்றம்: விசாரணைக்கு கோரிக்கை
இளம் செய்தியாளர்கள் சங்கத்தின் (YJA) செயலாளரும் நீதிமன்ற செய்தியாளருமான எம்.எஃப்.எம். ஃபஸீர், குளியாப்பிட்டி நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகளைச் செய்தி சேகரிக்கும் போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டமை குறித்து விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபரை கைது செய்தல், சித்திரவதை செய்தல் மற்றும் கொள்ளையடித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு தொடர்பான விசாரணையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஒழுங்கு நடவடிக்கை
நீதிமன்ற அறைக்குள் தாம் குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தபோது இரண்டு பொலிஸ் அதிகாரிகள், தம்மை வெளியே இழுத்துச் சென்று, தொடர்ந்து செய்தி வெளியிடுவதைத் தடுத்தனர் என்று எம்.எஃப்.எம். ஃபஸீர் முறையிட்டுள்ளார்.
இந்த நிலையில் இளம் செய்தியாளர்கள் சங்கம் இந்த சம்பவத்தைக் கண்டித்து, ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மற்றும் நீதியைத் தடுத்தல் எனக் கூறி அரச தகவல் திணைக்களத்தில் முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து, அரச தகவல் இயக்குநர் எச்.எஸ்.கே.ஜே. பண்டார, சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தக் கோரி, பதில் பொலி ஸ் மா அதிபருக்கு எழுதியுள்ளார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
