இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் அபிவிருத்தியை ஏற்படுத்திய தலைவர் மஹிந்த: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் அபிவிருத்தியை ஏற்படுத்திய தலைவர் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa). 2005ல் அவருக்குப் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. நிறைவு செய்ய முடியாது என்று கூறப்பட்ட யுத்தத்திற்கு முடிவு கட்டிய அவர், இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தார் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் நேற்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அமைச்சு தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி அரசியல் இல்லாமல் இந்த நாட்டில் நெடுஞ்சாலை கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சக்கு(Gotapaya Rajapaksa) இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற விரும்புகின்றேன். 100,000 கிலோமீற்றர் வீதி வலையமைப்பை அமைப்பதற்கு சுமார் 100 வருடங்கள் தேவைப்படும் என முன்னாள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
இந்த வீதிக் கட்டமைப்பை நிறைவு செய்ய இவ்வளவு காலம் பிடிக்கும் என்பது அவரது கணிப்பு. அந்த சவாலை நாங்கள் ஏற்க விரும்புகிறோம். கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இந்த 100000 கிலோமீற்றர் வேலைத்திட்டம் எமது ஐந்து வருடங்கள் முடிவதற்குள் நிறைவு செய்யப்படும் என நான் உறுதியளிக்கிறேன்.
அனுபவம் நிறைந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் எமது ஐந்து வருட ஆட்சிக்காலம் முடிவதற்குள் இந்த 100000 கிலோமீற்றர் வேலைத்திட்டத்தை நிறைவு செய்வோம். கபீர் ஹாசிம் சபையில் இல்லாவிட்டாலும் நாம் சொல்வதை அவர் வீட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார் என்று நினைக்கிறோம்.
அவர் காலத்தில் நடந்த ஊழல், மோசடிகளைப் பற்றி நாம் பேசுவோம் என்று அவர் தொலைக்காட்சி முன் நின்று பயந்து கொண்டிருப்பார். அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் குறித்து அவர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கும்போதே பேச விரும்புகிறேன். எமது ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் நமது இலக்குகள் எட்டப்படும் என்று நான் நம்புகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் எனது இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.
அமைச்சின் செயலாளர் .பிரேமசிறி அவர்களுக்கும் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரச அதிகாரத்தைக் கைப்பற்றி மிகுந்த இக்கட்டான காலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் தலைவர் தான் கோட்டாபய ராஜபக்ச. நவீன வீதிக் கட்டமைப்பை உருவாக்குவதாக அவரது சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்று அதில் உள்ளது. அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பு விரைவில் நிறைவு செய்யப்படும். ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை, கோபுரங்கள் மீதான அதிவேக நெடுஞ்சாலை, கண்டி வரையிலான அதிவேக நெடுஞ்சாலை, துறைமுகத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை போன்றவை 5 வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும். அனைத்து முக்கிய வீதிகளையும் கிராமப்புற வீதிகளையும் அபிவிருத்தி செய்வது எமது எதிர்பார்ப்பாகும்.
விவசாயிகளின் அனைத்து விவசாய உற்பத்திகளும் கூடிய விரைவில் நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே எமது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். பொதுமக்களுக்கு தமது பணியிடங்களுக்கு விரைந்து செல்லவும், பாடசாலை மாணவர்கள் தாமதமின்றி பாடசாலைக்குச் செல்லவும் வழிவகை செய்ய வேண்டும்.
அதைத்தான் நம் நாட்டு மக்கள் நம்மிடம் எதிர்பார்த்தார்கள். இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் அபிவிருத்தியை ஏற்படுத்திய தலைவர் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. 2005ல் அவருக்குப் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. நிறைவு செய்ய முடியாது என்று கூறப்பட்ட யுத்தத்திற்கு முடிவு கட்டிய அவர், இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தார்.
கிராமங்களிலிருந்த கற்பாதைகளை மற்றும் கொங்கிரீட் கற்கள் பதித்தும் கொங்கிரீட் போட்டும் அபிவிருத்தி செய்து கிராம வீதிகளில் முச்சக்கரவண்டிகள் பயணிக்கும் யுகத்தை உருவாக்கியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. 2015ஆம் ஆண்டைப் போலவே இன்றும் அவர் மீது அவதூறு பரப்பப்படுகிறது. 2015ஆம் ஆண்டு பொய்களைப் பரப்பி ஆட்சிக்கு வந்தவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட இந்த நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்றார்கள். ஆனால் அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்தார்கள்.
மத்திய வங்கி அப்பட்டமாகக் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் உள்ள அப்பாவி மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த அரசாங்கம். இரண்டு வருடங்களின் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் வெறுப்படைந்தனர். இறுதியாக நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் தோற்கடித்தனர். கடந்த இரண்டு வருடங்கள் கடந்தும் நல்லாட்சி அரசாங்கத்தினால் கூட்டுறவுத் தேர்தலில் கூட வெற்றிபெற முடியவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் இருந்த போது நாட்டில் கோவிட் நெருக்கடி இருக்கவில்லை.யுத்தத்தை நிறைவு செய்ய வேண்டியிருக்கவில்லை. 2015 இல், சீனாவுக்கு அடுத்த படியான மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட நாட்டை தான் ஒப்படைத்தோம். பொருளாதாரத்தை எல்லா வகையிலும் அழித்தார்கள். தொழில்களை அழித்து இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கினார்கள். வோக்ஸ்வேகன் தொழிற்சாலையை உருவாக்கி ஒரு மில்லியன் வேலை வாய்ப்பு தருவதாக இளைஞர்களை ஏமாற்றினர்.
தேர்தலுக்குப் பயந்தார்கள். பாராளுமன்றத்தில் தேர்தல் பற்றி சும்மாவாவது பேசவில்லை. இறுதியாக வீதியில் இறங்கித் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தத் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்றோம். நாட்டு மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கப் போராட வேண்டியிருந்தது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய கட்சியுடன் மக்கள் திரண்டனர்.
வெற்றி பெருவெற்றியாக மாறியது. இப்போது ஈஸ்டர் தாக்குதலால் தான் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் காண்பிக்க முயல்கின்றன. ஒரு கூட்டுறவுத் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாதவர்கள் இன்று உண்மையை மறைக்கப் பார்க்கின்றனர். மிகவும் சிரமப்பட்டுத் தோளில் சுமந்துகொண்டு நாடு முழுவதும் சுற்றி வந்து கதவுகளை உடைத்துத்தான் இவரை வெளியில் எடுத்தார்கள். இப்போது இரண்டு தேர்தல்களில் தோற்ற பிரேமதாசவை எப்படியாவது இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவதாகக் கூறுகிறார்கள்.
எதிர்க்கட்சி துண்டு துண்டாகி உள்ளது. இப்போது எதிர்க்கட்சிகளை வழிநடத்தப் பல தலைவர்கள் உருவாகியுள்ளனர். பிரேமதாசவுக்கு எதிராக மூன்று நான்கு கும்பல்கள் இப்போது நாடாளுமன்றத்தில் உருவாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் இருக்க விடுவதில்லை தாக்குகின்றனர் என்று சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடம் கூறத்தான் இவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே சென்றார்கள். சர்வதேச சமூகத்திற்குப் பொய் எழுதுவதற்காக இவர்கள் வாரக்கணக்கில் நாடாளுமன்றம் பொய் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த பொய்கள் பிடிபட்டதும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாயை எடுக்க வேண்டுமென்பதால், நாடாளுமன்றத்தில் மெதுவாக வந்து அமர்ந்திருக்கும் எதிரணி எம்.பிகளை கண்டேன். அவை இந்த காணொளி கிளிப்களில் உள்ளன. வெளியே சென்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டு மெதுவாக வந்து அமர்ந்து கெகாள்கிறார்கள். இப்படித்தான் இன்று எதிர்க்கட்சிகள் இந்த நாட்டு மக்களுக்காக உழைக்கின்றன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதியை முதன்முறையாக இலங்கை ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கியவர்கள் தாங்கள்தான் என முன்னாள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாஷிமா கூறுகிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் தான் இந்த நிர்மாண ஒப்பந்தங்கள் 5 இலங்கை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டன.
அடிக்கல் கூட நாட்டப்பட்டு ஒரு கிலோமீட்டர் நிர்மாணிக்க 27,000 லட்சம் ரூபா ஒப்பந்தம் செய்யப்பட்டது . இந்த வீதி 41 கி.மீ. நீளமானது. நல்லாட்சி அரசு இதனை இரத்துச் செய்து அவர்களின் அமைச்சரவையிலிருந்த தயா கமகேவுக்குச் சொந்தமான ஒலிம்பஸ் நிறுவனத்திற்கு மேலதிகமாக 15,000 இலட்சம் ரூபாவுக்கு வழங்கியது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்காமலிருந்திருந்தால் இந்த அதிவேக நெடுஞ்சாலையூடாக மக்கள் கண்டி, தம்புள்ளை வரை சென்றிருப்பார்கள்.
ஜனாதிபதியின் இரண்டு பொறியியலாளர்கள் தான் இந்த மதிப்பீடுகளைத் தயாரிக்கிறார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த மதிப்பீடுகள் பொறியாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகள் தங்கத்தில் அமைக்கப்படுகிறதா எனக் கடந்த காலங்களில் விமர்சித்தார்கள். இவ்வாறு விமர்சித்த நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது. 27,000 இலட்சம் செலவிடக் கூடியதற்கு 42,000 இலட்சத்திற்கு வழங்கப்பட்டது.
40 கிலோ மீட்டரை ரூ.15,000 லட்சத்தினால் அதிகரித்த போது 60 ,70 மில்லியன் ரூபா வரை மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அங்கு மத்திய வங்கியைச் சூறையாடினார்கள்.இங்கு 50 மில்லியனுக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது. முன்னைய நல்லாட்சி அரசாங்கத்திலும் இவ்வாறான ஒரு சில திருடர்கள் இருந்தனர். அது தான் உண்மை. இப்போது எங்கள் மீது சேறு பூசப் பார்க்கிறார்கள். கடந்த காலத்தில் தொடங்கிய அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் நிறுத்தப்பட்டன.
அத்தோ பாரிய மோசடியும் நடந்துள்ளது. ரூ.66 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வெளிச்சுற்று வட்ட நெடுஞ்சாலை 6 வழிச்சாலையிலிருந்து 4 வழிச்சாலையாகக் குறைக்கப்பட்டு அதே தொகைக்குத் திருப்பி வழங்கப்பட்டது. அமைச்சராக கபீர் இருக்கும் போதே இதற்குப் பதிலளிக்கிறேன். இவர்கள் எங்கிருந்ததாவது கடதாசி ஒன்றை எடுத்து வந்து சேறு பூச முயற்சிக்கின்றனர்.
100,000 கி.மீ வீதித் திட்டம் பொய்யானது என்றார்கள். 5, 10 மற்றும் 15 கிலோமீட்டர்கள் தான் இருப்பதாகச் சொன்னார்கள்.அவர்கள் செய்த தங்கப் பாதைகளைப் பற்றிச் சொல்கிறேன். இவர்கள் 10 பில்லியன் ரூபாவையே ஒதுக்கீடு செய்தனர். அதில் 2.7 பில்லியன் தான் செலவிடப்பட்டது. நாம் எஞ்சிய 7.2 பில்லியன்களையும் கடந்த அரசின் செலுத்தப்படாத 49 பில்லியன்களையும் ஜனாதிபதி வெற்றிபெற்றவுடன் மீளச் செலுத்தினோம்.
நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமல்ல. பல அமைச்சுகளுக்குமான நிதியும் செலுத்தப்பட்டிருக்கவில்லை. குறைந்த பட்சம் இராணுவ வீரர்களுக்கு உணவளிக்கச் செலவிட்டது கூட வழங்கப்படவில்லை. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு உணவளிக்கப் பணம் வழங்கப்படவில்லை. அந்தளவுக்கு இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தது.
கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியின் பின்னர், பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டு முதல் மூன்று மாதங்களுக்குள் பணம் செலுத்தப்பட்டது என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். அப்படி ஒரு சகாப்தம் இருந்தது. நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். எனவே நாம் இப்போது 100000 கிமீ திட்டத்திற்கான வீதிகளை அடையாளம் கண்டுள்ளோம். 71 468 வீதிகள் தொடர்பில் கோரிக்கைகள் வந்துள்ளன. அதில் 16705 வீதிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. 10877 வீதிகள் அமைக்கக் கேள்வி மனு கோரப்பட்டுள்ளன. தற்பொழுது 468 கேள்வி மனுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அவற்றை வழங்க எதிர்பார்க்கிறோம்.
மேலும் 54763 வீதிகள் மதிப்பிடப்பட்டுள்ளன. நாங்கள் சுமார் 4000 வீதிகளை நிர்மாணித்துள்ளோம். 1500 வீதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் திறந்து வைத்தோம். ஆனால் வீதிகள் எங்கே அமைக்கப்படுகின்றன என்று கபீர் ஹாஷிம் வினவினார். ஏனென்றால் கபீர் ஹாசிம் இந்த நாட்களில் வீட்டில் தான் இருக்கிறார். வெளியே செல்ல மாட்டார்.
அதனால் தான் அவருக்குத் தெரியவில்லை, நாட்டின் வீதிகள் அமைக்கப்படுவதைக் கண்டும் காணாதது போல இருப்பார்கள்.கடந்த 10 மாதத்தில் சுமார் 90 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளோம். இவற்றைக் காண விரும்பாதவர்கள் தான் எம்மை விமர்சிக்கின்றனர். திட்டத்தை நிறைவு செய்ய 100 வருடம் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டார். எம்மிடம் 600 பொறியியலாளர்கள் தான் இருந்தார்கள்.
புதிதாக 200 பேரை நியமிக்க ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதி வழங்கியுள்ளனர். 150 தொழில்நுட்ப அதிகாரிகளை நியமிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. சிலவற்றை அங்கீகரித்து, ஏற்கனவே உள்ள அளவை அதிகரிக்கவும் முடிந்துள்ளது. தற்போதுள்ள பொறியாளர்களைக் கொண்டு 71,000 வீதிகளை மதிப்பீடு செய்ய முடியாது.அரச துறையில் உள்ள அதிகாரிகள் தான் மதிப்பீடுகளைத் தயாரிக்க வேண்டும்.
எனவே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போது ஜனாதிபதியும் பிரதமரும் உணர்வுப் பூர்வமாகச் செவிமடுத்ததோடு அனுமதியும் வழங்கினார்கள். இந்த நெடுஞ்சாலை திட்டத்திற்கு மட்டுமன்றி 60,000 பட்டதாரிகளுக்கும் ஒரு இலட்சம் தொழில் திட்டத்தின் கீழ் 37,000 பேருக்கும் வேலை வாய்ப்புகளை எமது ஜனாதிபதி வழங்குவார்.நெருக்கடியான காலத்தில் இவ்வாறு வழங்கியதை வரவேற்க வேண்டும்.
இவற்றைச் செய்ய முடியாதவர்கள் நாட்டை அழித்தது மட்டுமன்றி எம்மீது சேறு பூசவும் பார்க்கிறார்கள். சேறு பூசி நாடு போற்றும் தலைவனை வீட்டுக்கு அனுப்பிய மனிதர்களாக நீங்கள் வரலாற்றில் பதியப்படுவீர்கள் என்பதை வீட்டிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்குக் கூற விரும்புகிறேன்.
உங்களால் முன்வைக்கப்பட்ட சட்ட மூலங்களினால் இன்று மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாகாண சபைகள் இருந்திருந்தால் நீங்கள் போராட மாட்டீர்கள். எதிர்க்கட்சியில் அறிவாளிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பைத்தியம் என்று எம்மிடம் கூறியுள்ளனர். இந்த இரண்டு வருடங்களில் இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியும் என்று நினைத்து தடுமாறுகிறீர்கள். களைத்துப் போய் கடைசியில் அழிந்து போவீர்கள். இதனைக் கூட தெரியாத தலைவர் தான் ஐமசவில் இருப்பதாகக் கட்சியில் உள்ளவர்களே சொல்கிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் இருப்பது அரசுக்கு நல்லது என்றும் சிலர் சொல்கிறார்கள். சம்பிக்க, பொன்சேக்கா போன்றவர்கள் காலால் இழுக்கிறார்கள் என்று அந்தக் கட்சியினரே சொல்கின்றனர். அத்தகைய அறிவார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐமசவில் உள்ளனர் கேலிக்கூத்தான எதிர்க்கட்சி தான் இன்று இருக்கிறது. இவர்கள் அரசு அதிகாரிகளை அச்சுறுத்தி வருகின்றனர். ஓய்வூதிய வயதை 65 ஆண்டுகளாக நீட்டிக்கும்போது, புதிதாக வருபவர்கள் வேலை இழக்க நேரிடும்.
60,000 பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்கிய அரசைப்பற்றித் தான் இவர்கள் பேசுகிறார்கள்.சபாநாயகரைத் தாக்கி பொய்களை இட்டுக்கட்டியாவது ஆட்சிக்கு வரப் பார்க்கிறார்கள். மத்திய வங்கியில் திருடவும் திட்டங்களிலிருந்து மோசடி செய்யவும் இருக்கும் இவர்களின் அவாவினால் பொறுமை இழந்துள்ளனர். மத்திய வங்கியில் திருடியவற்றை லொறியில் எடுத்து வந்து சிறிகொத்தவில் வைத்து விநியோகித்துள்ளனர்.
அத்தகைய எதிர்க்கட்சி தான் நாட்டில் இருக்கிறது. வாக்களித்தவாறு பாதுகாப்பான நாட்டை அபிவிருத்தியான நாட்டை உருவாக்குவோம். நெடுஞ்சாலை கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய உலக வங்கி 500 மில்லியன் டொலர் வழங்கியுள்ளது. எமது நிதி அமைச்சர் , இந்தியாவுக்கு சென்றார். மேலும் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார். ஜனாதிபதியினதும் பிரதமரும் ஆலோசனைப்படி நிதி அமைச்சை அவர் சிறப்பாக வழிநடத்துகிறார்.
தற்காலிக நெருக்கடிகளை விரைவாகத்
தீர்த்து நாட்டை அபிவிருத்தி செய்யும் வரை ஓயமாட்டோம். இவற்றுக்குப் பதில் வழங்கத்
திங்கட்கிழமையாவது நாடாளுமன்றம் வருமாறு கபீர் ஹாசிமிடம்
கூறுகிறோம்.கீழ்த்தரமான அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்காது
புத்தி சாதுரியமாகச் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.