பக்கச்சார்பற்ற முறையான விசாரணைக்கு டிரானிடம் ஜீவன் கோரிக்கை
கடந்த வாரம் நானு ஓயா, உடரதல்ல தோட்டம் மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம்(Tiran Alles) நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர் மற்றும் மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் பொது செயலாளர் என்ற வகையிலும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளேன் என அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார்.
முறையான விசாரணை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“பொறுப்புள்ள அரச ஊழியர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வகையில் இது எனது கடமை என நான் கருதுவதால், இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
குறித்த சம்பவங்கள் நடந்த நேரத்தில் நடந்தவற்றின் உண்மைத் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, பொறுப்புள்ள அனைத்து நபர்களும் பொறுப்புக் கூற வேண்டியது அவசியம் என்றும் நான் நம்புவதாக அமைச்சரிடம் மேலும் தெரிவித்துள்ளேன்.
மேலும் அத்தகைய விசாரணையானது, நமது அரசு மற்றும் சமூகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளை வலுப்படுத்துவது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரியுள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |