அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் அழுத்தங்கள் - ஜயந்த சமரவீர
அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் அழுத்தங்கள் ஏற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
1956ஆம் ஆண்டு தேசப்பற்று என்ற பயணம் பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்டதும் நிறுத்தப்பட்டது.
1970ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் கொண்டு வந்த தேசிய பொருளாதார கொள்கை தோல்வியடைந்தது.
கலாநிதி என்.எம்.பெரேரா உள்ளிட்ட இடதுசாரிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமையே இதற்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்திற்குள் அதேபோன்ற சம்பவங்களே நடந்து வருகின்றன. இவ்வாறான நிலைமையில், 56 மற்றும் 70களில் நடந்தது போல் நடக்கலாம்.
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது, நாட்டில் காணப்படும் சவாலை வெற்றி கொள்ள கோட்டாபய ராஜபக்சவை தவிர வேறு தகுதியான நபர் இல்லை என்ற நிலைப்பாட்டை மக்களுக்கு கொண்டு சென்றவர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர்.
இப்படியானவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் நிலைமையானது மிகவும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் அழுத்தங்கள் ஏற்பட்டு வருகிறது எனவும் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.