முல்லைத்தீவில் முடிவுக்கு வரும் ஜப்பானிய திட்டம்
முல்லைத்தீவில் முடிவுக்கு வரும் ஜப்பானிய திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஜப்பானிய அரசசார்பற்ற நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமொன்று இம்மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
இத்திட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு மற்றும் நீதிபுரம் ஆகிய கிராமங்களிலும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் தேறாங்கண்டல் கிராமத்திலும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வன்னிவிளாங்குளம், பாலைப்பாணி, பனங்காமம், கிடாய்ப்பிடிச்சகுளம் ஆகிய கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.
சிறிய குளங்களை புனரமைப்பு செய்து "மக்களின் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதுடன், வீட்டுத்தோட்டம் மற்றும் கோழி வளர்ப்பின் ஊடாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது" இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் ஊடாக பயன்பெற்ற பயனாளிகள் ஜப்பானிய அரசசார்பற்ற நிறுவனத்திற்கும், நிதிப்பங்களிப்பினை வழங்கிய அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்த நிகழ்வு கிராம அலுவலர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் தலைமையில் தேறாங்கண்டல், ஒலுமடு கிராம பொதுநோக்கு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20.06.2025) நடத்தப்பட்டுள்ளது.
நஞ்சற்ற மரக்கறிகளை தாங்களும் தம் சமூகமும் பெறுவதை உறுதி செய்வதோடு, சுழற்சி முறையில் வீட்டுத் தோட்டம் மற்றும் கோழி வளர்ப்பினை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை உயர்த்த இத்திட்டம் உறுதுணையாக இருப்பதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.




