யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் ஒருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலம் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
வைத்தியர்களின் பணிப்புரை
இந்நிலையில், குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் தாய்க்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ள
நிலையில் தொற்று பரவும் என கருதி வீட்டுக்கு செல்லுமாறு வைத்தியர்கள்
பணித்துள்ளனர்.
தாயும், குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்
இதனை தொடர்ந்து அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (27.11.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு அம்மை நோய் தீவிரமாகி நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டமையினால் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |