மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு! இது கரிநாள் - யாழ்.பல்கலை நுழைவு வாயிலில் கட்டப்பட்ட கறுப்பு வர்ண துணி
யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டப்பட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் சிவில் சமூகங்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாக பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்காலிற்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளனர்.
இதன்போது, மாணவர்கள் பல்கலைகழகத்தில் தமது வாகனங்களை தரித்துவிட்டு செல்ல முற்ட்ட போதுபல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டதோடு பரமேஸ்வரா ஆலயத்திற்கு செல்பவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய நாள் சுதந்திர தினம் என கொடியேற்றுகிறீர்கள் ஆனால் பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள், ஆலய வழிபாட்டை மேற்கொள்பவர்கள் செல்ல முடியாதா? என மாணவர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்களையே நாங்கள் அனுமதிக்கவில்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவர்களால் சுதந்திர தினம் கரி நாள் என தெரிவித்து மாணவர்களால் கறுப்பு வர்ண துணி பிரதான வாயிலில் கட்டப்பட்டது.





