யாழிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சு!
யாழிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது இன்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்து மீது வவுனியா சாந்தசோலை சந்திக்கு அண்மித்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் இ.போ.ச பேருந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பேருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.



