இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த தயங்கும் இலங்கை கடற்படை: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
சர்வதேச பாதுகாப்பிற்கு செல்லும் கடற்படை ஏன் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த தயங்குகிறது என யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேன தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று(11.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தயங்கும் இலங்கை கடற்படை
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“எல்லைமீறி இலங்கை கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த தயங்கும் கடற்படை சர்வதேச பாதுகாப்பிற்கு செல்கிறது.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிப்பதும் வேதனையளிப்பதுடன், எமது வாழ்வாதரத்தையும், எமது வளங்களை அழித்துக் கொண்டிருப்பவர்களை அவ்வாறு அழிப்பதிலிருந்து கட்டுப்படுத்தாது விடுவிப்பதுதான் கவலையளிக்கிறது.
இந்திய - இலங்கை அரசுகள் கலந்துரையாடி இவ்வாறான அழிவுகளிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தபின்னர் விடுப்பது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும்.
அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடற்றொழில் அமைப்புக்களை அழைத்திருந்தபோதும் அது கலந்துரையாடப்படவில்லை.
வெளிநாட்டு படகுகள் இலங்கையில் அனுமதி பெற்றுவந்து தொழிலில் ஈடுபடுவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |