யாழ் இளைஞன் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: பொலிஸாருக்கு மூத்த சட்டத்தரணியின் அறிவுரை
சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என்ற அடிப்படையில், பொலிஸார் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
கொடிகாமத்தில் இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், இளைஞன் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தனது கண்டனத்தை தெரிவிக்கையில்,
“சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்றார் என 18 வயதான உழவு இயந்திர சாரதி மீது பொலிஸார் கண்மூடித் தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சட்டவிரோத செயற்பாடுகள்
சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு ஒரு வரையறை உண்டு. அவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டே சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும்.

சட்டத்தின் எல்லைகளை தாண்டி, சட்டவிரோதமான முறையில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது.
சட்டவிரோதமான முறையில், மணலை ஏற்றி சென்றார் என்றால் அதனை நிறுத்த பொலிஸாருக்கு பல வழிகள் உண்டு.
பூரண ஒத்துழைப்பு
இறுதியாக வாகன சில்லுகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம். ஆனால் பொலிஸார் வாகனத்தின் சில்லுகளை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளாது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

மனித உயிர்கள் பெறுமதியானவை. அவற்றை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடுகள் நடத்தி பறிக்க அனுமதிக்க முடியாது. எனவே இந்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் தேவை.
நீதியை மறைக்காது விசாரணைகளுக்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |