யாழில் தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நகைகள் திருட்டு
தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் அவரை தாக்கியதாகவும் அத்துடன், பெண்ணின்
நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை
பொலிஸாரின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள்
தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வரும் நிலையில் நேற்று அதிகாலை இருவர் வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த சிசிரிவி கமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர், வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்தி வீட்டினுள் அத்து மீறி நுழைந்து பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, நகைகளும் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இரு குடும்பங்களுக்கு
இடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே பெண்ணின் மீது தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.