டக்ளஸ் தலைமையில் இடம்பெற்ற யாழ். நெடுந்தீவு அபிவிருத்தி குழு கூட்டம்
யாழ். நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கினைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவு பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் இன்று (14-07-2023) ஆரம்பமான குறித்த கூட்டத்தில் பிரதேசத்தின் கடல் போக்குவரத்து சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,
மின்பிறப்பாக்கிகள் சுழற்சி முறையில் மாற்றப்படுகின்ற போது நேர ஒழுங்கு பின்பற்றப்பட வேண்டும்.
அதேபோன்று எரிபொருட்களின் விலை, நாடளாவிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகபட்சம் 20 ரூபாய் அதிமாக மாத்திரமே விற்பனை செய்ய முடியும். எரிபொருள் விற்பனை தொடர்பாக மேற்பார்வை செய்யுமாறு பிரதேச செயலாளரை கேட்டுக் கொள்கின்றேன்.
பின்பற்றப்பட வேண்டிய சட்ட நியமங்கள்
நாட்டின் ஏனைய பிரதேசங்களைவிட சுமார் 45 ரூபாய் வரையில் விலை அதிகரித்து நெடுந்தீவில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக பிரதேச மக்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையிலேயே அமைச்சரினால் மேற்குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே நெடுந்தீவில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுகின்ற போது, உரிய சட்ட நியமங்கள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், பிரதேச சபை மற்றும் மிருக வைத்திய அதிகாரி போன்ற எவற்றின் அனுமதிகளும் பெறப்படாமல் தான்தோன்றித்தனமாக மாடுகள் வெட்டப்படுவதாக பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் சுட்டிகாட்டப்பட்ட நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.
மேலும் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில்
ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின்
அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கலந்துகொள்ளார்.
துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வு
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளன. குறிப்பாக சுகாதாரம், கல்வி, வீட்டுத்திட்டம், உள்ளூராட்சி, கூட்டுறவு, நீர்வழங்கல், மின்சாரம்,போக்குவரத்து, சமுர்த்தி, விவசாயம், நீர்ப்பாசனம், வாழ்வாதாரம், மீன்பிடி, வீதி புனரமைப்பு காணிஉள்ளிட்ட பல்வேறு துறைகள் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்-தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |